டிராஃபிக்கை வைத்து செம பிஸ்னஸ் ஐடியா..!! ஹர்ஷ் கோயங்காவின் பாராட்டை பெற்ற மும்பை ஸ்டார்ட் அப்..!!
சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெரிய நகரங்களில் டிராஃபிக் பிரச்சினை தீராத பிரச்சினையாக உள்ளது. நாளுக்கு நாள் இது தீவிரமாகி தான் வருகிறது. இந்த டிராஃபிக் பலருக்கும் தொல்லையாக இருக்கும் போது இங்கே ஒரு நபர் மாற்றி யோசித்து ஒரு ஸ்டார்ட் அப் தொடங்கி நல்ல லாபம் பார்த்து வருகிறார்.
பீட்சா டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தவர் மும்பையை சேர்ந்த கௌரவ் லோந்தே. இவர் தான் மும்பை டிராஃபிக்கை கொண்டு வெற்றிகரமாக ஒரு தொழிலை நடத்தி வருகிறார். பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா இவரது யோசனையை வெகுவாக பாராட்டியுள்ளார். அப்படி அந்த இளைஞர் என்ன ஸ்டார்ட் அப் தொடங்கினார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

கௌரவ் லோந்தே கடந்த 2009ஆம் ஆண்டு பீட்சா டெலிவரி செய்யும் பணியாளராக இருந்தார். தானேயிலிருந்து அந்தேரிக்குத் தினமும் பயணம் செய்த அவர், மும்பையின் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி, சுமார் 24 கிலோமீட்டர் தூரத்தை கடக்கவே தினமும் 3 மணி நேரம் வரை செலவிட வேண்டியிருந்தது. இவரை போலவே ஆயிரக்கணக்கான மக்கள் டிராபிக்கில் நீண்ட நேரம் பசியால் வாடுவதை கண்டார்.
ஒருமுறை போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டிருந்தபோது, ஒரு நபர் வேர்க்கடலை விற்பதை கண்டார். டிராஃப்பிக்கில் சிக்கி இருந்த பலரும் அதை வாங்கி சாப்பிட்டபோது, அவருக்கு ஒரு பிஸ்னஸ் ஐடியா வந்துள்ளது. ஒரு கைப்பிடி கடலையே நமக்கு மகிழ்ச்சியையும் ஆற்றலையும் தருகிறது என்றால், ஒவ்வொரு நாளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு சூடான, புதிய உணவை வழங்கினால் என்ன என தோன்றியதாம்.
இதனை அடுத்து டிராஃபிக் வடா பாவ் (Traffic Vada Pav) என்ற பெயரில் மும்பையின் புகழ்பெற்ற வடா பாவ்களை விற்க தொடங்கினார். 2019-ஆம் ஆண்டு தனது வேலையை விட்டுவிட்டு, தனது தாயின் சேமிப்பிலிருந்து ஒரு லட்சம் ரூபாயை பெற்று இந்த தொழிலை தொடங்கியுள்ளார். வீட்டிலேயே சுவையான வடா பாவ் தயாரித்து , ஒரு பெட்டியில், ஒரு சிறிய குடிநீர் பாட்டில் மற்றும் டிஷ்யூ பேப்பருடன் வெறும் 20 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று படிப்படியாக வளர்ந்த அவர் 2021-ஆம் ஆண்டிற்குள் தினமும் 800 வடா பாக்களை விற்கும் நிலைக்கு உயர்ந்தார். இதன் மூலம் மாதம் சுமார் 2 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் அளவுக்கு அவரது தொழில் வளர்ச்சி கண்டது.
கௌரவ் லோந்தேவின் இந்த பயணத்தை பாராட்டியுள்ள ஹர்ஷ் கோயங்கா, போர்டு ரூம்களில் திட்டமிட்டு உருவாக்கும் நிறுவனங்களை விட, அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளில் இருந்து தோன்றும் இது போன்ற யோசனைகளே இந்தியாவின் வளர்ச்சி என கூறியுள்ளார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
