International
oi-Halley Karthik
சிங்கப்பூர்: உலகிலேயே அதிகம் சம்பளம் பெறும் பிரதமராக சிங்கப்பூர் பிரதமர் முதலிடத்தை பிடித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விட இவரது சம்பளம் அதிகமாகும். இத தற்போது சர்வதேச அளவில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்-க்கு தற்போது 64% ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. இதானல் அவருக்கு மாதம் ரூ.2.25 கோடி கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.27 கோடி வருமானமாக கிடைக்கும்.

இந்த புதிய சம்பள உயர்வு, வரும் அக்.15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் சம்பளமே மாதத்திற்கு வெறும் ரூ.27.8 லட்சம்தான். ஆனால், லாரன்ஸ் வாங் சம்பளம் இதை விட 7 மடங்கு அதிகமாகும். இருப்பினும் இந்த சம்பள உயர்வு, பொதுமக்களிடையே விவாதங்களை ஏற்படுத்தியதை லாரன்ஸ் ஒப்புக்கொண்டார். இதனால் தனக்கு உயர்த்தப்பட்ட கூடுதல் சம்பள தொகையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கப்போவதாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.
பிரதமருக்கே சம்பள உயர்வு கிடைத்திருக்கும்போது மற்றவர்களுக்கும் கிடைக்காதா என்ன? அந்த வகையில், அமைச்சர்களுக்கு ஆண்டுக்கு ரூ.8.22 கோடியிலிருந்து ரூ.13.46 கோடி வரை நிர்ணயிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல இளம் அமைச்சரின் வருமானம் ரூ.68 லட்சத்திலிருந்து ரூ.1.12 கோடியாக உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
வெளியிலிருந்து பார்க்கும்போது இது பிரம்மாண்டமான சம்பள உயர்வு மாதிரி தெரிந்தாலும், சிங்கப்பூரில் கடைசியாக கடந்த 2012ம் ஆண்டுதான் அமைச்சர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. அப்போது கூட பொதுமக்களின் எதிர்ப்பால் 36% குறைக்கப்பட்டது. அதன் பிறகு 2017 மற்றும் 2023ம் ஆகிய ஆண்டுகளில் திட்டமிடப்பட்ட ஊதியக் குழு ஆய்வுகள் பொருளாதார சூழல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டன.
மறுபுறம் தனியார் துறை மற்றும் நீதித்துறையில் சம்பளம் கணிசமாக உயர்ந்துவிட்டதால் அரசியலிலும் சிறந்த திறமையாளர்களை தக்கவைக்கவும், ஊழலை முற்றிலுமாக தடுக்கவும் இந்த சம்பள உயர்வு அவசியமானது என்று பிரதமர் லாரன்ஸ் வாங் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

