Last Updated:
இந்தியாவில் டிஜிட்டல் அரெஸ்ட் போர்வையில் ஆன்லைன் மோசடி கும்பல் பணம் பறிக்கிறது.
இந்தியாவில் அச்சுறுத்தும் ஆன்லைன் மோசடி கும்பலிடம் உஷாராக இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
டிஜிட்டல் அரெஸ்ட் எனக்கூறி வீடியோ காலில் வந்து அச்சுறுத்தும் கும்பல். வங்கி கணக்கு விவரங்களை மிரட்டி வாங்கி, பணத்தை மொத்தமாகச் சுருட்டும் சம்பவங்கள். அச்சுறுத்தும் ஆன்லைன் மோசடி கும்பல்.. எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீசும். இந்தியாவில் டிஜிட்டல் அரெஸ்ட் எனக்கூறி வசதி படைத்தவர்களை டார்கெட் வைத்து கைவரிசை காட்டும் கும்பல் சிலந்தி வலை போல பரவிக் கிடக்கிறார்கள்.
குறிப்பிட்ட நபரை டார்கெட் வைத்து செல்போன் மூலம் தொடர்பு கொள்ளும் கும்பல், தங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் என்றும் சம்பந்தப்பட்ட நபரின் செல்போன் எண் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறி அதிர்ச்சி கொடுப்பார்கள். அது தொடர்பாக உடனே விசாரிக்க வேண்டும் என மிரட்டும் கும்பல், ஒரு மணி நேரத்திற்குள் டெல்லி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறும் வற்புறுத்துவார்கள்.
ஆனால், “தான் அப்படியொரு எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை” எனக் கூறி மறுப்பு தெரிவித்தால்…சரி, வீடியோ காலில் விசாரிக்க வேண்டும் எனக்கூறி வாட்ஸ்அப் காலில் வருவார்கள். அப்போது அதிகாரிகளைப் போலத் துருவித் துருவி விசாரித்து, வங்கி ட்ரான்ஸ்சாக்சன்களை சரி பார்க்க வேண்டும் எனக்கூறி, அக்கவுண்ட் விவரங்களை கேட்பார்கள். அதில் எந்த unwanted transaction-னும் நிகழவில்லை என்றால், வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கிறோம் எனவும் நம்பிக்கை கொடுப்பார்கள்.
அதை உண்மை என நம்பி மர்ம நபர்கள் கேட்ட வங்கிக் கணக்கு விவரங்களைக் கொடுத்தால் அவ்வளவு தான், சுமார் 3 மணி நேரம் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற போர்வையில் கட்டுக்குள் வைத்து, வங்கிக் கணக்கிலிருந்து மொத்த பணத்தையும் லவுட்டி விடுவார்கள். இப்போதைக்கு உங்கள் அக்கவுண்டை ஃப்ரீஸ் செய்துள்ளோம் ; விசாரணைக்குப் பின்னர் குற்றம் பொய்யான உடனே பணத்தைத் திருப்பி உங்களது வங்கிக் கணக்கிற்கே அனுப்பி விடுவோம் எனக் கூறி அப்போதைக்கு இணைப்பைத் துண்டிப்பார்கள்.
தன் மீதுதான் தவறு இல்லையே பிறகு ஏன் பயப்பட வேண்டும்? என நினைத்து பணத்தைப் பறிகொடுத்தவர்களும் வெளியில் தெரிவிக்காமல் இருப்பார்கள். ஆனால் பல மாதங்களாகியும் பணம் திரும்ப வராத போது இது ஒரு மெகா மோசடி என தெரியவரும். அப்படி ஏராளமான புகார்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் குவிந்து கிடக்கின்றன.
டிஜிட்டல் அரெஸ்ட் என்ற போர்வையில் கைவரிசை காட்டும் ஆன்லைன் மோசடி கும்பல் பெரும்பாலும் கம்போடியாவில் உள்ள லோகேஷனையே காட்டும். அதில் பல முறை வட மாநில லொகேஷனையும் காட்டும். இதனால் ஆன்லைன் மோசடி கும்பல் கம்போடியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதுங்கி இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. அதில் சிலரை தனிப்படை அமைத்தும் கைது செய்துள்ளனர்.
டிஜிட்டல் அரெஸ்ட் எனக்கூறி ஏமாற்றுவது எப்படி? சந்தேகம் வராமல் பணத்தை பறிப்பது எப்படி? பின்னர் போலீசில் சிக்கிக்கொள்ளாமல் தப்பிப்பது எப்படி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்கு பயிற்சி கொடுத்து ஆட்களை தயார் செய்து கைவரிசை காட்டுகிறார்கள். பணத்தை பறிகொடுத்து 24 மணி நேரத்தை கடந்தால் அக்கும்பலை பிடிப்பது இன்னும் சிரமம். எனவே டிஜிட்டல் அரெஸ்ட் என்ற போர்வையில் மர்ம நபர்கள் யாராவது அழைத்தால் நம்பி வங்கி கணக்கு விவரங்களைக் கொடுத்து ஏமாற வேண்டாம் என சைபர் க்ரைம் போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
டிஜிட்டல் அரெஸ்ட் போர்வையில் வீடியோ கால்.. அச்சுறுத்தும் ஆன்லைன் மோசடி கும்பல்… சைபர் க்ரைம் எச்சரிக்கை!


