Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: 2027 ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. 3 ஆண்டுகளுக்கு பின் நடப்பாண்டில் மினி ஏலத்தை இந்தியாவில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனால் நவம்பர் மாதத்தில் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் விவரம் வெளியாகும் என்று பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. ஏனென்றால் கேகேஆர், சிஎஸ்கே, மும்பை மற்றும் லக்னோ ஆகிய அணிகள் மினி ஏலத்திற்காக ஆர்வமாக காத்திருக்கின்றன. அதற்கு முன்பாகவே சில டிரேட் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்துள்ளன. லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், டெல்லி அணிக்கு டிரேட் செய்யப்பட்டுவிட்டார்.

டெல்லி அணியில் இருந்து குல்தீப் யாதவ், லக்னோ அணிக்கு வந்துவிட்டார். அதேபோல் மும்பை அணியின் ஹர்திக் பாண்டியாவை டிரேட் டீல் மூலமாக வாங்குவதற்கு சிஎஸ்கே, கேகேஆர் உள்ளிட்ட அணிகள் தீவிரமாக இருப்பதாக பேச்சுகள் அடிபடுகிறது. ஆனால் சிஎஸ்கே அணி புதிய பயிற்சியாளரை நியமிக்காமல் தாமதம் செய்து வருகிறது.
தோனி இன்னும் இறுதி முடிவை எடுக்காததால், சிஎஸ்கே அணி நிர்வாகம் அமைதியாக உள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பயிற்சியாளர் பெயரை வைத்து விவாதம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதத்தில் நடத்த பிசிசிஐ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடைசி வாரத்திலேயே ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்றது. இந்த முறை பழைய ஸ்டைலில் டிசம்பர் மாதத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணியும் நவம்பர் 2வது வாரத்திற்கு பின் வெளியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் ரீடெய்ன் செய்யப்பட்டவீரர்களின் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பாக டிரேட் ஒப்பந்தங்கள் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகும் என்று தெரிகிறது. அதேபோல் 3 ஆண்டுகளுக்கு பின் ஐபிஎல் மினி ஏலம் இந்தியாவில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கிறது. இதனால் எந்த நகரில் நடக்கும் என்ற விவாதமும் தொடங்கி இருக்கிறது.

