
கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து டிக்டொக்கில் வீடியோ பதிவிட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இருவர் கைதாகினர்.
கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து டிக்டொக் செயலியில் வீடியோ பதிவிட்ட இரு சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை (05) முதல் திங்கட்கிழமை (08) வரையான காலப்பகுதியில் திடீர் போக்குவரத்து விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குறித்த நடவடிக்கையின் போது தலைக்கவசம் அணியாமல் வாகனம் செலுத்தியமை, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றை செலுத்தியவர்களும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இது தவிர, கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து டிக்டொக்கில் வீடியோ பதிவிட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இருவர் கைதாகினர்.
இச்சேதனை நடவடிக்கையின் போது சாரதி அனுமதிப் பத்திரம், வருமான வரிச் சான்றிதழ், காப்பீட்டுச் சான்றிதழ், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றங்களுக்காக நடவடிக்கைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
சந்தேகநபர்களில் ஒருவருக்கு நீதிமன்றத்தால் ரூ. 38,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஏனைய சந்தேகநபர்கள் மீது எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
பாறுக் ஷிஹான்

