டாடா குழுமத்துக்கு அடுத்தடுத்த சிக்கல்.. நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட கென்யா அரசு..!!
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான டாடா குழுமம் அண்மை காலமாகவே தொடர்ச்சியான சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. அண்மையில் தான் டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் தனது தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்து பெரிய அதிர்ச்சியை கொடுத்தார். இந்நிலையில் வெளிநாடுகளிலும் டாடா நிறுவனங்களுக்கு பிரச்சினைகள் எழ தொடங்கியுள்ளன.
கென்யா நாட்டில் டாடா குழுமம் தன்னுடைய டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ டாடா கெமிக்கல்ஸ் தங்கள் நாட்டுக்குள் மேற்கொண்டுவரும் அனைத்து வர்த்தக மற்றும் சுரங்க நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

டாடா நிறுவனம் பல தசாப்தங்களாக கென்யாவில் இருந்தபோதிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கோ அல்லது உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கோ எந்தவொரு பெரிய தொழிற்சாலையையோ அல்லது கட்டமைப்பையோ உருவாக்கவில்லை என ரூட்டோ குற்றம் சாட்டியுள்ளார்.
டாடா நிறுவனம் மாகாடி ஏரி பகுதியிலிருந்து எடுக்கப்படும் கனிமங்களை சோடா சாம்பலாக மாற்றி, உள்ளூர் தொழிற்சாலைகளில் பயன்படுத்துவதற்கு பதிலாக, அவற்றை இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் அப்படியே ஏற்றுமதி செய்து லாபம் ஈட்டுவதாகவும் கூறியுள்ளார். டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக இங்கே ஒப்பந்தத்தில் உள்ளது, ஆனால் காஜியாடோவில் எதையாவது கட்டியுள்ளதா? நம் நாட்டின் வளங்களை எடுத்துக்கொண்டு செல்கிறது லாபம் பார்க்கிறது பதிலுக்கு நமக்கு எதுவும் செய்யவில்லை, நாம் என்ன அவர்களுக்கு அடிமைகளா என கேள்வி எழுப்பியுள்ளார்.
டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் கென்ய கிளை நிறுவனமான டாடா கெமிக்கல்ஸ் மாகாடி முறையான ராயல்டி தொகையை செலுத்தவில்லை மற்றும் ஒழுங்குமுறை விதிகளை பூர்த்தி செய்யவில்லை என கூறி, கடந்த ஜூலை மாத இறுதியில் அந்நாட்டின் சுரங்கத்துறை அமைச்சகம் அதன் நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிட்டிருந்தது.கென்யா அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து டாடா கெமிக்கல்ஸ் உயர் நீதிமன்றத்தில் தடை பெற முயன்றது, இது தொடர்பான விசாரணை அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே டாடா கெமிக்கல்ஸ் வெளியேறிய பிறகு, அந்த சுரங்க உரிமங்களை இரண்டு புதிய நிறுவனங்களுக்கு வழங்க கென்யா அரசு திட்டமிட்டுள்ளது. புதிதாக வரவுள்ள நிறுவனங்கள் காஜியாடோ பகுதியிலேயே ஒரு பெரிய கண்ணாடி தயாரிப்பு தொழிற்சாலையையும், மற்றொரு பெரிய வேதிப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையையும் நிறுவ வேண்டும் என்பதே அரசின் நிபந்தனையாகும். இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என கென்ய அரசு கூறுகிறது.
அதிபர் ரூட்டோவின் இந்த அதிரடி முடிவுக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளன. ஆளுங்கட்சியுடன் தொடர்புடைய பிற நிறுவனங்களுக்கு அப்பகுதியில் எண்ணெய் மற்றும் கனிம வளங்களை வழங்கவே டாடா கெமிக்கல்ஸை வெளியேற அதிபர் உத்தரவிடுகிறாரா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
டாடா ஆலை மூடப்பட்டால் நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள் என பலரும் ஒரே இரவில் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், மாகாடி பகுதிக்கு அடியில் பல லட்சம் கோடி மதிப்பிலான லித்தியம் கனிம வளங்கள் இருப்பதே இந்த திடீர் நடவடிக்கைக்குக் காரணம் என்றும் சாடியுள்ளனர்.
