
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (10) ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை விரிவாகப் பரிசீலித்த உயர் நீதிமன்றம், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு, கடந்த 2018ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் 06 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தண்டனைக் காலப்பகுதியிலேயே, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

