ஜோகூர் பாரு:
ஜோகூர் பாருவில் உள்ள உணவகங்கள் மற்றும் காய்கறி பேக்கிங் தொழிற்சாலை ஒன்றில் குடிநுழைவுத் துறை நடத்திய இரண்டு நாள் அதிரடி சோதனையில், முறையான வேலை அனுமதி இன்றி பணியாற்றிய 77 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்கள் மற்றும் உளவுத்துறை சேகரித்த தரவுகளின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக ஜோகூர் மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்தி முகமட் தாருஸ் தெரிவித்தார்.
ஏப்ரல் 27, முதல் நாளில் பல்வேறு உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 39 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 26 மியான்மர் நாட்டவர் (6 பெண்கள் உட்பட), 11 வங்காளதேசத்தவர் மற்றும் 2 இந்தோனேசிய ஆண்கள் அடங்குவர். விசாரணைக்காக மனிதவள மேலாளராகப் பணியாற்றிய மலேசிய ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 28, இரண்டாம் நாளில் காய்கறி பேக்கிங் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் 38 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 37 இந்தோனேசியர்கள் மற்றும் சீனாவைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர். சட்டவிரோத குடியேறிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக அந்தத் தொழிற்சாலையின் மலேசிய மேலாளரும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 54 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் மீது முறையான அடையாள ஆவணங்கள் மற்றும் வேலை அனுமதி இன்றி பணிபுரிதல், சமூக வருகை பாஸை (Social Visit Pass) தவறாகப் பயன்படுத்தி வேலை செய்தல், அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிக காலம் தங்கியிருத்தல் (Overstaying) ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது செத்தியா திரோபிகா (Setia Tropika) குடிநுழைவுத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது 1959/63 குடிவரவுச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.




