ஜோகூர் பாரு | மார்ச் 16, 2026:
ஜோகூர் துறைமுகத்தில் சட்டவிரோதமாக பெட்ரோலை ஒரு எண்ணெய்க் கப்பலுக்கு மாற்ற முயன்ற கும்பலை மலேசிய அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். இது தொடர்பாக 9 வெளிநாட்டினர் மற்றும் ஒரு மலேசியர் என மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 11, 2026 அன்று, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் (KPDN) அமலாக்கப் பிரிவினர் இந்தச் சோதனையை நடத்தினர்.
அப்போது துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த எண்ணெய்க் கப்பலில் இருந்து சுமார் 929,124 லிட்டர் பெட்ரோல் கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு மட்டும் சுமார் RM2.6 மில்லியன் ஆகும்.
ஒரு பெரும் எண்ணெய்க் கப்பல், பெட்ரோலை ஏற்றி வந்த லோரி, பெட்ரோலை மாற்றப் பயன்படுத்தப்பட்ட ரப்பர் குழாய்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து ஆவணங்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட கப்பல், வாகனம் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றின் மொத்த மதிப்பு RM4,902,952 (சுமார் 4.9 மில்லியன் ரிங்கிட்) என மதிப்பிடப்பட்டுள்ளது என்று, அமலாக்க இயக்குநர் அஸ்மான் ஆடம் கூறினார்.
இந்தக் கடத்தல் முயற்சி குறித்த விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 10 பேரும் தற்போது போலீஸ் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் மானியம் வழங்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பொருளான பெட்ரோலை சட்டவிரோதமாக வெளிநாட்டுக் கப்பல்களுக்கு விற்பனை செய்வதைத் தடுக்க அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post ஜோகூர் துறைமுகத்தில் பெட்ரோல் கடத்தல் முறியடிப்பு: 10 பேர் கைது, RM4.9 மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

