ஜோகூர் பாரு:
ஜோகூரில் திடீரென நிறுத்தப்பட்ட நீர் விநியோகம் தற்போது கட்டங்கட்டமாக வழக்கநிலைக்குத் திரும்பி வருவதாக மாநில நீர் விநியோக நிறுவனம் ரன்ஹில் எஸ்ஏஜே (Ranhill SAJ) தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் பல்வேறு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஏற்பட்ட நீர் மாசு காரணமாக, ஜோகூரின் பெரும்பாலான பகுதிகளில் முன்னறிவிப்பின்றி நீர் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. எனினும், நவம்பர் 2 ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி, 81 விழுக்காடு பகுதிகளில் விநியோகம் மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளதாக ரன்ஹில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சினாய், சீலோங், புக்கிட் இண்டா, கோத்தா திங்கி, பொந்தியான் உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையாகச் சீரடைந்துள்ளது.
அதே நேரத்தில், கூலாய் பகுதியில் 85%, கெம்பாஸ் மற்றும் தெப்ராவ் பகுதிகளில் 75%, ஸ்கூடாய்யில் 64% என சில இடங்களில் கட்டங்கட்டமாக நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.
ஜோகூர் ஆற்றில் ஏற்பட்ட மாசு காரணமாக மாநிலத்தின் பல நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயலிழந்தன. இதன் விளைவாக 8 லட்சத்திற்கும் (800,000) மேற்பட்ட மக்கள் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டனர்.
தொடக்க விசாரணையில், கோத்தா திங்கியில் உள்ள மணல் சுரங்கத் தளத்தின் ஆறாவது சுத்திகரிப்புக் குளம் உடைந்ததால், சுத்திகரிக்கப்படாத நீர் ஜோகூர் ஆற்றில் கலந்தது தெரியவந்தது. இதனால் ஆற்றுநீரின் மாசு அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகரித்தது என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.




