ஜோகூர் பாரு | மார்ச் 15, 2026:
ஜோகூர் பாரு, பெர்மாஸ் ஜெயா பகுதியில் கேபிள் திருட்டில் ஈடுபட முயன்ற ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் குழுவினர் துணிச்சலாகத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றன.
நேற்று அதிகாலை சுமார் 2:20 மணியளவில் ஜாலான் பெர்மாஸ் உத்தாரா (Jalan Permas Utara) பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 51 வயது தொழில்நுட்ப வல்லுநர், வழக்கமான ரோந்துப் பணியில் இருந்தபோது சுமார் 50 மீட்டர் நீளமுள்ள நிலத்தடி கேபிள் திருடப்பட்டிருப்பதைக் கண்டறிந்து புகார் அளித்தார் என்று, ஜோகூர் பாரு தெற்கு மாவட்டக் காவல்துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் ரவுப் செலாமாட் கூறினார்.
நேற்று அதிகாலை 5:36 மணியளவில் இச்சம்பவம் குறித்துக் காவல்துறையிடம் முறையான புகார் அளிக்கப்பட்டது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஆதாரங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 431A-இன் கீழ் (சொத்துக்களுக்குத் தீங்கு விளைவித்தல்) விசாரணை செய்யப்படுகிறது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இச்சம்பவம் குறித்து ஏதேனும் கூடுதல் தகவல் தெரிந்தால், 07-2182323 என்ற எண்ணிற்கு அழைத்து விசாரணைக்கு உதவுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
The post ஜோகூரில் கேபிள் திருடனை விரட்டிப் பிடித்த மோட்டார் சைக்கிள் இளைஞர்கள்; வீடியோ வைரல்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

