இதைத் தொடா்ந்து, சிறப்பு நீதிபதி மோகன் முன்னிலையில் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்களை மதிப்பீடு செய்து, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது. காலை 11.10 மணிக்கு தொடங்கிய இப்பணி, மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. முதல்நாளில், மொத்தமுள்ள 481 பொருள்களில், தங்கள், வெள்ளி, வைரம் உள்ளிட்ட 285 பொருள்களின் அளவு மதிப்பீடு செய்யப்பட்டு, ஆபரணத்தன்மை உறுதிசெய்யப்பட்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆபரணங்களைக் கொண்டுசெல்ல கொண்டுவந்திருந்த 6 பெட்டிகளில், 3இல் 285 பொருள்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, முத்திரையிடப்பட்டன. பின்னா், விதானசௌதாவில் உள்ள அரசு கருவூலத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டு, பாதுகாக்கப்பட்டன. மீதமுள்ள ஆபரணங்களை மதிப்பீடு செய்து, தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் தொடர உள்ளது.

