Last Updated:
மதுராவில் 17 வயது சிறுமிக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சாமியார் மீது குற்றச்சாட்டு, போலீஸ் புகார் அளிக்குமாறு அறிவுரை
உத்தர பிரதேசத்தில் 17 வயது சிறுமியை சாமியார் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த சாமியார் ஒருவர், நான் கடவுள் எனக் கூறிக் கொண்டு ஊருக்குள் உலா வந்துள்ளார். தன்னிடம் ஆசி பெற்றால் தீமைகள் விலகி, நன்மை பயக்கும் என உதார் விட்டுத் திரித்துள்ளார். அவரை கடவுளின் அவதாரமாகவே பாவித்த மக்கள் பலரும் தேடிச் சென்று ஆசி பெற்றுள்ளனர். இதேபோன்று, 17 வயது சிறுமி ஒருவர் அந்த சாமியாரை சந்திக்க சென்றுள்ளார்.
அப்போது சாமியார் சிறுமிக்கு ஜூஸ் கொடுத்துள்ளார். அதை வாங்கி பருகிய சிறிது நேரத்தில் அவர் மயக்கம் அடைந்துள்ளார். மயக்கம் தெளித்த பின்னர் பார்த்த போது தன்னை சாமியார் பாலியல் வன்கொடுமை செய்ததை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுமி தனது குடும்பத்தினருடன் மதுராவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக சம்பந்தப்பட்ட சாமியார், தனது சிஷ்யர்களுடன் வந்துள்ளார். தன்னைத் தேடி வரும் பக்தர்களிடம் அத்துமீறிய சாமியார், நல்லவர் வேஷம் போட்டு ஊருக்குள் உலாவியதை கண்டு பாதிக்கப்பட்ட சிறுமி கொந்தளித்துள்ளார். உடனே ஆத்திரம் தலைக்கேறியதும் பொங்கியெழுந்த சிறுமி, சாமியாரை தாக்க முயற்சித்துள்ளார்.
அதைக் கண்டு அவரது பாதுகாவலர்கள் சிறுமியை தடுத்து நிறுத்தியுள்ளனர். இருந்தபோதும் ஆக்ரோஷமாக காணப்பட்ட சிறுமி, சாமியாருக்கு எதிராக முழக்கமிட்டபடி தனக்கு நீதி வேண்டும் என்று அழுது புலம்பினார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சிறுமியை சமாதானம் செய்தனர். அத்துடன், முறைப்படி புகார் அளித்தால் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி சாமியார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மதுராவில் சாமியார் ஒருவர் 17 வயது சிறுமிக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து அத்துமீறல்.. நடுரோட்டில் சாமியாரை வெளுத்து வாங்கிய 17 வயது சிறுமி!


