சென்னை: லோக்சபா தேர்தல் ரிசல்ட் ஜூன் 4ல் வருவதால் யாருக்கு வாழ்த்து சொல்ல விரும்புகிறீர்கள்? என திடீரென்று கேட்கப்பட்ட கேள்வியால் சைலன்ட்டான ராகவா லாரன்ஸ் அதன்பிறகு கூறிய பதில் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பு மக்களுக்கு உதவி செய்து வருகிறார். சமீபத்தில் டிராக்டர்கள் வழங்கி மனதை கவர்ந்தார்.
இந்நிலையில் தான் சென்னையில் இன்று ராகவா லாரன்ஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் பதிலளித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛லோக்சபா தேர்தல் ரிசல்ட் ஜூன் 4ல் வருவதால் யாருக்கு வாழ்த்து சொல்ல விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை எழுப்பினர் இதனால் திகைத்துப்போன லாரன்ஸ் சில வினாடிகள் சைலன்டாக இருந்தார் அதன்பிறகு அவர் சிரித்தபடி நிதானமாக பதிலளித்தார்.
ராகவா லாரன்ஸ் கூறுகையில், ஜெயிக்கிற எல்லோருக்கும் வாழ்த்துகள். ஜெயிக்கப்போகிற அனைவருக்கும் வாழ்த்துகள். தோல்வியடைந்தால் அடுத்த முறை ஜெயிக்க வாழ்த்துகள். அரசியல் ரீதியாக நான் எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை என்று கூறி அரசியல் சார்ந்த சர்ச்சைகளில் சிக்காமல் நழுவினார்.
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு, பத்திரிகையாளர் ஒருவர், ‛‛நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா’’ என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு ராகவா லாரன்ஸ், ‛‛எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் நோக்கம் எனக்கு இல்லை. இது ஒரு மாற்றத்துக்கான செல்ப் சர்வீஸ். இந்த சேவையானது கடவுளுக்கான சேவை. இது அரசியலுக்கான நோக்கம் அல்ல. அரசியல் என நினைப்பவர்கள் போகப்போக புரிந்து கொள்வார்கள்’’ என பதிலளித்தது அரசியல் தொடர்பான யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


