Last Updated:
NavIC அமைப்பின் துல்லியமான நேரத்தைக் காட்டும் சேவை (Timing Service) தொடர்ந்து சீராகச் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவின் சொந்த வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பான ‘NavIC’ (Navigation with Indian Constellation), தற்போது தனியாக இயங்கி இருப்பிடத்தைக் காட்டும் சேவையை வழங்க முடியாது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், NavIC அமைப்பில் தற்போது செயல்பாட்டில் உள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை தேவையான குறைந்தபட்ச அளவை விடக் குறைந்துவிட்டது என்று விளக்கமளித்தார்.
ஒரு பகுதியின் இருப்பிடத்தைக் கண்டறிய குறைந்தபட்சம் 4 செயற்கைக்கோள்கள் தேவைப்படும். IRNSS-1F செயற்கைக்கோளின் 10 ஆண்டு ஆயுட்காலம் முடிந்ததை அடுத்து, தற்போது IRNSS-1B, IRNSS-1I மற்றும் NVS-01 ஆகிய 3 செயற்கைக்கோள்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.
இதனால், NavIC அமைப்பால் தனியாக இயங்கி இருப்பிடத்தைக் காட்ட முடியாது. அதேநேரத்தில், இதன் துல்லியமான நேரத்தைக் காட்டும் சேவை (Timing Service) தொடர்ந்து சீராகச் செயல்பட்டு வருகிறது.
இருப்பிட சேவை பாதிக்கப்பட்டிருந்தாலும், இதனால் பயனர்களுக்கோ அல்லது இராணுவத்திற்கோ எந்தவித செயல்பாட்டுப் பாதிப்பும் இல்லை என்று அரசு உறுதி அளித்துள்ளது. ஏனெனில், NavIC தற்போது அமெரிக்காவின் GPS, ஐரோப்பாவின் Galileo, ரஷ்யாவின் GLONASS போன்ற பிற உலகளாவிய செயற்கைக்கோள் அமைப்புகளுடன் இணைந்து ‘Multi-constellation GNSS’ முறையில் செயல்படுகிறது. இந்திய ராணுவமும் இதே முறையையே பயன்படுத்தி வருகின்றன.
இந்த சிக்கலைச் சரிசெய்து NavIC-ஐ மீண்டும் முழுமையாகச் செயல்பட வைக்க இஸ்ரோ தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அடுத்த தலைமுறை செயற்கைக்கோள்களான NVS-03 விண்ணில் ஏவத் தயாராக உள்ளது என்றும், NVS-04 மற்றும் NVS-05 ஆகியவை மேம்பட்ட தயாரிப்பு கட்டத்தில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை விண்ணில் ஏவப்பட்டதும், இந்தியா மற்றும் அதைச் சுற்றியுள்ள 1,500 கி.மீ சுற்றளவிலான பகுதிகளுக்கு NavIC மீண்டும் தனது தனித்துவமான சேவையை வழங்கும்.
ஜி.பி.எஸ்-க்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட NavIC-க்கு என்னாச்சு? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!


