Last Updated:
டி20 உலகக் கோப்பை தொடரில், வாழ்வா சாவா ஆட்டத்தில், இந்திய அணி இன்று ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. வெற்றியையும் தாண்டி, இந்திய அணிக்கு மேலும் சில விஷயங்கள் தேவைப்படுகின்றன.
டி20 உலகக்கோப்பை தொடரின் 4 லீக் போட்டிகளிலும் தோல்வி காணாத இந்திய அணி சூப்பர்8 சுற்றில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மோசமாக தோல்வி அடைந்ததால் இந்திய அணியின் ரன்ரேட்டும் பாதளத்தில் உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சூப்பர் Eight சுற்றில் இதுவரை மேற்கு இந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் நெட் ரன்ரேட் அடிப்படையில் முதல் இரு இடங்களில் உள்ளன. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி வெல்வது மட்டுமின்றி நெட் ரன் ரேட்டையும் உயர்த்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
இந்திய அணியின் நெட் ரன் ரேட் தற்போது மைனஸ் 3.800 என உள்ளது. இதை பிளஸ் ஆக மாற்ற வேண்டுமானால், இன்று சில அதிரடிகளை காட்ட வேண்டும். அதாவது, முதலில் பேட்டிங் செய்தால், 77 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். 150 ரன்கள் இலக்கு என 2வது பேட்டிங் செய்தால், 11 ஓவர்களுக்குள் எட்ட வேண்டும். இன்றைய போட்டியில் மட்டுமல்ல, அடுத்து வரும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு என்ற இக்கட்டான நிலையில் உள்ளது இந்திய அணி.
அதுவும், தென் ஆப்ரிக்கா அணி மேற்கு இந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகளை வென்றால்தான் நமக்கு வாய்ப்பு. மொத்தத்தில் அரையிறுதி வாய்ப்பு என்பது இந்திய அணியின் வெற்றியை மட்டுமல்லாது, பிற அணிகளுக்கு இடையேயான போட்டியையும் சார்ந்துள்ளது. இதனிடையே, இந்திய அணியின் தொடக்க வரிசையில் 3 இடதுகை ஆட்டகாரர்கள் உள்ள நிலையில் சஞ்சு சாம்சனை சேர்க்க அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
தந்தைக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக ரிங்கு சிங் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், அவரும் இன்றைய போட்டியில் விளையாடுவாரா என தெரியவில்லை. இதேபோல வாஷிங்டன் சுந்தருக்குப் பதில் அக்ஷர் படேல் விளையாடலாம் என்றும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் இந்திய அணி, ஜிம்பாப்வேவை வீழ்த்த வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
Feb 26, 2026 12:37 PM IST


