India
oi-Mani Singh S
ராஞ்சி: மாணவர்களின் போராட்டம் காரணமாக ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையம் மற்றும் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றால் நடத்தப்பட்ட 44 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஜார்க்கண்ட் அரசு அறிவித்தது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரம் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் டார்ச் விளக்குகளை ஒளிரவிட்டபடி தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால், ஜார்க்கண்ட் அரசுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய போட்டி தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கோபம் அடைந்த மாணவர்கள் மற்றும் தேர்வர்கள் போராட்டத்தில் குதித்தனர். முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும், முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 25 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களின் போராட்டம் காரணமாக ஜார்க்கண்டில் காங்கிரஸ் தயவில் ஆட்சியில் இருக்கும் ஹேமந்த் சோரன் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. மாணவர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் போராட்டத்தை தீவிரப்படுத்திய மாணவர்கள், நாளை முதல்வர் இல்லத்தை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இந்த நிலையில், போட்டி தேர்வுகளை ரத்து செய்வதாக ஹேமந்த் சோரன் அறிவித்தார்.
இதன்படி, ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையம் மற்றும் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றால் நடத்தப்பட்ட 44 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது. அதற்கான பட்டியலையும் நேற்று வெளியிட்டது. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டமும் முடித்துக்கொள்ளப்பட்டது.
எனினும், சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரி போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். இதற்கிடையே, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் டார்ச் விளக்குகளை ஒளிரவிட்டபடி தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது ஹேமந்த் சோரன் அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

