Last Updated:
J&K Cloudburst | ஜம்மு-காஷ்மீரில் மேக வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்பதாகக் கூறியுள்ள பிரதமர் மோடி, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இமாச்சலப்பிரதேசத்தையும் வெள்ளம் புரட்டிப் போட்டுள்ளது. கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகள் உருக்குலைந்து கிடக்கின்றன.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பு காரணமாக, பெருமழை கொட்டித் தீர்த்தது. சோசிட்டி கிராமத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. மாதா சண்டி கோயிலுக்கு யாத்திரை செல்லும் வழியில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யாத்திரை சென்றபோது பெருமழை கொட்டியது. இதனால், பலர் நீரில் சிக்கினர். இதில், 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். திரும்பிய திசையெங்கும் வெள்ளக்காடாகக் காட்சியளித்த நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். அவர்களை மீட்கும் பணிகளில் மீட்புப் படையினர் ஏராளமானோர் ஈடுபட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் மேக வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்பதாகக் கூறியுள்ள பிரதமர் மோடி, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, மேக வெடிப்பால் இமாச்சலப் பிரதேசத்திலும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாலங்கள், வாகனங்கள், குடியிருப்புகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த நிலையில், சிம்லா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. காவல் நிலையம் அடித்துச் செல்லப்பட்டதுடன் பேருந்து நிலையம் இடிந்து விழுந்து கடைகள் சேதமடைந்தன.
சிம்லா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கார்கள் தத்தளித்தன. தலைநகர் டெல்லியிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்தியா கேட் அமைந்துள்ள பகுதி, Moti Bagh சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. Kalkaji பகுதியில் மரம் முறிந்து, தந்தை- மகள் சென்ற இருசக்கர வாகனம் மீது விழுந்தது. இதில், தந்தை உயிரிழந்த நிலையில், மகள் காயமடைந்தார்.
August 15, 2025 8:14 AM IST


