8
ஜப்பான் பிரதமராக ஷிகெரு இஷிபா (67) மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜப்பானின் பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஒக்டோபர் 27 ஆம் திகதி நடைபெற்றது. மொத்தம் 465 இடங்களுக்கு நடைபெற்ற இத்தோ்தலில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை இழந்தது.
இதையடுத்து, புதிய பிரதமரைத் தெரிவு செய்வதற்கான பாராளுமன்றக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமராக ஷிகெரு இஷிபா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 221 உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா். பிரதான எதிர்க்கட்சியான அரசமைப்பு ஜனநாயக கட்சியின் தலைவர் யோஷிகிகோ நோடா 160 உறுப்பினா்களின் ஆதரவை மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார்.
மீண்டும் பிரதமரானதைத் தொடா்ந்து, வெளியுறவு அமைச்சா் டகேஷி இவயா, பாதுகாப்பு அமைச்சா் ஜென் நகாடனி, அமைச்சரவை செயலாளர் யோஷிமசா ஹயாஷி உள்ளிட்ட தனது முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றவா்களையே அந்தப் பதவிகளுக்கு இஷிபா நியமித்துள்ளார்.
மீண்டும் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும், பாராளுமன்றத்தில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் இஷிபா பெரும் சவால்களை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜப்பானின் பிரதமராகப் பதவி வகித்த ஃபுமியோ கிஷிடா பதவி விலகியதையடுத்து, லிபரல் ஜனநாயக கட்சித் தலைவராக இஷிபா கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி தெரிவு செய்யப்பட்டார்.

