Last Updated:
ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை டோக்கியோவில் இந்தியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
2 நாட்கள் பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
15 ஆவது இந்தியா – ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு சென்றடைந்தார். டோக்கியோ விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அந்நாட்டு உயர் அதிகாரிகள் வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து, இம்பீரியல் உணவகத்திற்கு சென்ற பிரதமர் மோடியை ஜப்பானியர்கள் காயத்ரி மந்திரம் ஓதி வரவேற்றனர்.
ராஜஸ்தானி உடையில் தோன்றிய ஜப்பானியர்கள் சிலர், பஜனை பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர். பின்னர், இந்தியாவின் பாரம்பரிய நடனங்களான பரதநாட்டியம், மோகனியாட்டம், கதக், ஒடிசி உள்ளிட்டவை மூலம் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இந்தியா – ஜப்பான் உச்சி மாநாட்டுடன் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி இன்று பங்கேற்க உள்ளார். அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ள பிரதமர் மோடி, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு சீனா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டின் தியான்ஜின் நகரில் வரும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில், டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா-ஜப்பான் பொருளாதார கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, உலக நாடுகள் இந்தியாவை உற்றுநோக்குவதுடன், இந்தியாவின் ஆதரவு மற்றும் உதவியை நாடுவதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவில் மெட்ரோ ரயில், உற்பத்தி, தொழில்முனைவு, செமி கண்டக்டர் என பல்வேறு துறைகளில் ஜப்பான் இணைந்து பணியாற்றி வருவதாக பிரதமர் கூறினார். அரசியல் நிலைத்தன்மை கொண்ட இந்தியா, விரைவில் உலகின் 3ஆவது பெரிய பொருளாதார நாடாகும் என்று மோடி தெரிவித்தார்.
August 29, 2025 2:23 PM IST


