
Last Updated:
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக, அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு ஜனவரி 8 ஆம் தேதி கூடுகிறது.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்தான விவாதத்திற்கு, நாடாளுமன்றக் கூட்டுக் குழு வரும் ஜனவரி மாதம் 8-ம் தேதி கூடுகிறது.
குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடைபெறும் தேர்தல் நடைமுறையை பரிந்துரைத்தது. இதைச் செயல்படுத்தும் வகையில் அண்மையில் முடிவடைந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இரு மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
அரசியலமைப்பைத் திருத்த மசோதாவை நிறைவேற்றும் அளவுக்கு பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை. மேலும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரு மசோதாக்களும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டன.
முன்னாள் சட்ட அமைச்சர் சவுத்ரி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 39 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள இந்தக் குழுவின் முதல் கூட்டம் ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
December 24, 2024 5:00 PM IST

