இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேருவால் துவங்கப்பட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (ஏஜேஎல்) சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியாகிவந்தது. இந்தப் பத்திரிகை கடந்த 2008ஆம் ஆண்டு மூடப்பட்டது. இந்த சமயத்தில், ஏஜேஎல் நிறுவனம் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 90 கோடி கடன்பட்டிருந்தது.
அப்போது அந்த நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பங்குதாரர்களாக இருந்த 2010ஆம் ஆண்டு துவங்கப்பட்ட யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ. 50 லட்சத்தை செலுத்தி ஏஜேஎல் நிறுவனத்தை வாங்கியது. யங் இந்தியா நிறுவனத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு யங் இந்தியா நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகள் இருந்தன.
இதையும் படியுங்கள் : “கட்சியில் எந்த சலசலப்பும் இல்லை.. அனைத்தும் சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளன” – பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி
இந்தப் பின்னணியில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். அதில், “நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் சட்டவிரோதமாக ‘யங் இந்தியா’ என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ‘யங் இந்தியா’ நிறுவனத்தின் பங்கில் 76 சதவீதம் என்பது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் தான் உள்ளது. சோனியா காந்தி 38 சதவீத பங்கையும், ராகுல் காந்தி 38 சதவீத பங்கையும் வைத்துள்ளனர். இதனால் பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை வெறும் 50 லட்சம் செலவில் மாற்றிவிட்டனர்” எனக் கூறினார்.
இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடைபெற இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது எனத் தெரியவந்தது. இதனால், வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்து விசாரித்துவருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை அமலாக்கத்துறை நேரில் அழைத்து விசாரணை நடத்தியிருந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, நேஷனல் ஹெரால்டு வழக்கில் தொடர்புடைய ரூ.700 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அந்தக் குற்றப்பத்திரிகையில், சோனியா மற்றும் ராகுல் காந்தியை முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளி எனத் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் காங்கிரஸ் வெளிநாட்டு தலைவர் சாம் பிட்ரோடாவின் பெயரும், சுமன் துபே உட்பட பலரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் 25ஆம் தேதிக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக, மாநில தலைமையகத்தில் உள்ள அமலாக்க இயக்குநரக அலுவலகங்கள் முன்பும், அந்தந்த மாநிலங்களில் மாவட்ட அளவில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும் நாளை, புதன்கிழமை, ஏப்ரல் 16, 2025 அன்று நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
April 15, 2025 9:42 PM IST

