Last Updated:
பிரதமர், “ஒவ்வொரு ஓவியத்தின் பின்னாலும் முகவரியைக் குறிப்பிட்டால் தான் என்னால் பதில் கடிதம் அனுப்ப முடியும்” என்று கூறி சிறுவனை உற்சாகப்படுத்தியிருந்தார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்களின் போது, அந்த மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் பலரும் பிரதமர் நரேந்திர மோடியிடம் கைகளால் வரையப்பட்ட மற்றும் கைவினைப் பொருட்களால் உருவாக்கப்பட்ட அவரது உருவப்படங்களை பரிசாக வழங்கினர். இந்த அன்பான பரிசுகளைப் பெற்றுக்கொண்ட பிரதமர், தற்போது அந்த மாணவர்கள் மற்றும் கலைஞர்களுக்குத் தனிப்பட்ட முறையில் பாராட்டு கடிதங்களை அனுப்பியுள்ளார்.
இந்த நெகிழ்ச்சியான தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவன் மயங்க் கோஷ், கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமரிடம் ஒரு ஓவியத்தை வழங்கினார். அப்போது பிரதமர், “ஒவ்வொரு ஓவியத்தின் பின்னாலும் முகவரியைக் குறிப்பிட்டால் தான் என்னால் பதில் கடிதம் அனுப்ப முடியும்” என்று கூறி சிறுவனை உற்சாகப்படுத்தியிருந்தார்.
அன்றைக்கு சொன்னது போலவே இப்போது பிரதமர் மோடி அந்த சிறுவனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிகழ்வு சிறுவன் மயங்க் மற்றும் அவனது குடும்பத்தினரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதேபோன்று, பூர்பா பர்தமான் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் பசக் மற்றும் பபியா மொண்டல் ஆகியோருக்கும் பிரதமரிடமிருந்து கடிதங்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து ஓவிய கலைஞர் பபியா மொண்டல் கூறுகையில், குடும்பச் சூழல் காரணமாக இடையில் நின்றுபோயிருந்த தனது ஓவியப் பணியை, பிரதமரின் இந்த அங்கீகாரம் மீண்டும் துளிர்விடச் செய்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த திரிஷாக்னி பானர்ஜியும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர், தங்களைப் போன்ற சாதாரண மாணவர்களுக்காகவும் கலைஞர்களுக்காகவும் நேரம் ஒதுக்கி கடிதம் எழுதியது தங்களின் தன்னம்பிக்கையை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக இவர்கள் அனைவரும் பெருமிதத்துடன் கூறுகின்றனர். இந்த அங்கீகாரம் தங்களின் கலைப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.
சொன்னதை செய்த பிரதமர் மோடி.. மேற்கு வங்க சிறுவர்களுக்கு கடிதங்களை எழுதி வியப்பில் ஆழ்த்தினார்..


