Last Updated:
ஆந்திராவில் சொத்தில் பங்கு கேட்டதால் மகனை கொலை செய்து கால்வாயில் புதைத்த தந்தை புக்கையா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் முதல் மனைவிக்கு பிறந்த மகனை கொலை செய்து கால்வாயில் குழி தோண்டி புதைத்த தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள புட்டலகூடம் கிராமத்தைச் சேர்ந்தவர் புக்கையா. ஊருக்கு ஒதுக்குப்புறமான வயல்வெளியில் தற்காலிக குடிசை போட்டு ஆடு மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். புக்கையா, தனது முதல் மனைவியிடம் விவாகரத்து பெறு பிரேமிலா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு இரண்டு மகன்கள் இருந்த நிலையில் இளைய மகன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் சொத்தில் பங்கு கேட்டு முதல் மனைவிக்கு பிறந்த மகன் மங்கியா, புக்கையாவிற்கு அழுத்தம் கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. ஆனால் சொத்தை பிரித்து எழுத, புக்கையாவிற்கு விருப்பம் இல்லை. கூடவே முதல் மனைவியின் மகனுக்குச் சொத்தில் பங்கு கொடுக்கவும் அவருக்கு விருப்பம் இல்லை. இதனால் “அதோ தருகிறேன்! இதோ தருகிறேன்!” எனக்கூறி அவர் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சமீபத்தில் மூத்த மகன் சொத்தை பிரித்து எழுதி தரச் சொல்லி மீண்டும் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த புக்கையா, மூன்று நாட்களுக்கு முன் மூத்த மகன் மங்கியாவை அடித்து கொலை செய்து கால்வாயில் புதைத்துள்ளார். இந்த சம்பவத்தை கண்டுபிடித்த கிராமத்தினர், போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் புக்கையாவை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் மகனை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
மேலும் தகவல் அறிந்து அவருடைய முதல் மனைவி மற்றும் உறவினர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். புக்கையாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்திய போலீசார், கொலை செய்யப்பட்ட மங்கியா உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தினர். இதற்கிடையே புக்கையா குறித்து பேசிய முதல் மனைவி ஏற்கனவே தனது இளைய மகன், மற்றும் தாய், தந்தையைக் கொலை செய்த புக்கையா, தற்போது தனது மூத்த மகனையும் கொலை செய்திருப்பதாக அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
விசாரணையில் முடிவில் மேலும் பல மர்மங்கள் வெட்ட வெளிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொத்தில் பங்கு கேட்டதால் முதல் மனைவிக்குப் பிறந்த மகனை, தந்தையே கொலை செய்து கால்வாயில் குழி தோண்டி புதைத்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
July 17, 2025 12:43 PM IST
சொத்தில் பங்கு கேட்ட முதல் மனைவியின் மகன்.. பெற்ற தந்தையே செய்த அதிர்ச்சி செயல்.. அடுத்தடுத்து அவிழும் மர்ம முடிச்சுகள்!


