International
oi-Halley Karthik
காத்மாண்டு: நேபாள பெரு வெள்ளத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி.. 3 நாட்களாக உயிருக்கு போராடி வந்த 6 வயது சிறுமியை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திரும்பிய பக்கம் எல்லாம் சேறும் சகதியும், அதில் புதைந்துள்ள உடல்களும்தான் தெரிகிறது. 2,500க்கும் அதிகமானோர் காணவில்லை. தங்கள் குடும்பத்தினர் உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா என உறவினர்கள் கவலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவத்தினர்தான்.

மீட்புப்பணி
சுனாமி போல வந்த வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தேடுவது அவ்வளவு லேசுபட்ட காரியம் கிடையாது. இருந்தாலும் ராணுவத்தினர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். ரசுவா மாவட்டத்தின் திமுரே கிராமத்தில் ஆக.28ம் தேதி மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது.. யாரும் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தது. அது ஒரு அழுகுரல்.. எல்லோரும் ஒரு நிமிடம் செய்துக்கொண்டிருந்த வேலைகளை அப்படியே நிறுத்திவிட்டனர்.. குரல் எங்கிருந்து வருகிறது என்பது தெளிவாக தெரியவில்லை.
சிறுமியின் குரல்
யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அழுகுரல் எங்கிந்து வருகிறது என்று எதிர்பார்த்திருந்தனர். சேறும், சகதியும், குப்பைகளுமாக இருந்த இடத்திலிருந்து அந்த அழுகுரல் மீண்டும் கேட்டது. அது ஒரு சிறுமியின் குரல்.. உடனே மொத்த டீமும் குரல் கேட்ட இடத்தில் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியது. பொறுமையாக.. கவனமாக.. ஒவ்வொரு தடைகளையும் நீக்கினர். அதிசயம் நடந்தது.. சிறுமியை கண்டுபிடித்தனர். சிறுமிக்கு 6 வயதுதான்.. உடல் முழுவதும் சகதியில் புதைந்திருக்க.. தலையை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு அழுதுக்கொண்டிருக்கிறாள்.
மீட்பு பணியில் இருந்தவர்களால் இதை நம்பவே முடியவில்லை. சடலங்களை மட்டும் எடுத்து போட்டவர்களுக்கு.. உயிருடன் இருக்கும் சிறுமியை பார்த்தவுடன் ஆச்சரியம்!
சிறுமி மீட்பு
மீட்பு பணிகள் வேகமெடுத்தன. ஆனாலும் நிறைய சிக்கல்கள் இருந்தன. சிறுமியின் உடலை அழுத்திக்கொண்டிருந்த பொருட்களை உடனடியாக எடுக்க முடியாது. அப்படி எடுத்தால்.. அது சிறுமியின் உயிருக்கு ஆபத்தாகிவிடும். இந்த சூழலை மருத்துவர்கள் ‘கிரஷ் சிண்ட்ரோம்’ என்று சொல்வார்கள். பாறையோ, மண், சகதியோ கனமான ஏதோ ஒன்று உடலின் மீது நீண்ட நேரமாக அழுத்திக்கொண்டிருக்கிறது எனில்.. நசுங்கிய தசைகளிலிருந்து பொட்டாசியம் மற்றும் நச்சுக்கள் ரத்தத்தில் கலந்திருக்கும்.
உயிருக்கே ஆபத்து
இந்த நேரத்தில் சிறுமியின் மீது விழுந்திருந்த கனமான பொருளை அப்புறப்படுத்தினால்.. நச்சுக்கள் உடனடியாக இதயம் மற்றும் சிறுநீரகத்திற்கு பாய்ந்து மாரடைப்பை ஏற்படுத்தும். எனவே முதலில் மருத்துவ குழுவினர் சிறுமிக்கு நரம்பு வழியாக IV திரவத்தை செலுத்தியிருக்கின்றனர். பின்னர் இடிபாடுகளை அப்புறப்படுத்தி சிறுமியை மீட்டனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். விமானம், ஹெலிகாப்டர் ரெடி.. ஆனால் வானிலை ஒத்துழைக்கவில்லை.
எனவே ஒருநாள் கழித்து, நேற்று மதியம் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். தற்போது சிறுமி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 3 நாட்களுக்கு பிறகு சிறுமி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் நேபாள மீட்பு குழுவினரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.




