கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், நர்சிங் படித்து முடித்துவிட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு ஏமனுக்கு வேலைக்கு சென்றார். 2011-ஆம் ஆண்டு டோமி தாமஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்று, ஒரு குழந்தை பிறந்ததும் குடும்பத்துடன் ஏமனில் செட்டில் ஆகியுள்ளார்.
நாளடைவில் போதிய வருவாய் இல்லாததால், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து சொந்தமாக கிளினிக் ஆரம்பித்தார். 2015 ஆம் ஆண்டு கிளினிக் தொடங்கிய பின், கேரளா வந்த நிமிஷா பிரியாவுடன் மஹ்தியும் உடன் வந்துள்ளார்.
இதையடுத்து தனியாக ஏமன் சென்ற செவிலி நிமிஷா பிரியாவிடம் இருந்து, முழுமையாக கிளினிக்கை அபகரிக்க மஹ்தி முற்பட்டுள்ளார். அதற்கு நிமிஷா பிரியா மறுப்பு தெரிவித்ததும், அவரை துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. கேரளா வந்தபோது நிமிஷா பிரியாவுடன் எடுத்த போட்டோவை காட்டி, அவர் தனது மனைவி என்று கூறி ஏமன் அதிகாரிகளை மஹ்தி நம்ப வைத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பாஸ்போர்ட்டை தராமல் மிரட்டிய மஹ்திக்கு, மயக்க ஊசி செலுத்தி அதை மீட்க கேரள செவிலி திட்டமிட்டுள்ளார். மயக்க மருந்து அதிக அளவில் உடலில் செலுத்தப்பட்டதால் மஹ்தி உயிரிழந்ததாக கூறப்பட்டது. கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா என்பவர், ஏமன் நாட்டை சேர்ந்தவரை கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ளார். அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு நாளை (16ம் தேதி) அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, நிமிஷாவின் குடும்பத்தினர் சார்பில் இந்திய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில் இருந்துவருகிறது. மறுபுறம், சன்னி முஸ்லிம் தலைவர் காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் மூலம், அங்குள்ள பிரபல சூஃபி மதகுருவான ஷேக் ஹபீப் உமர் மூலம் உயிரிழந்த மஹ்தி குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையின் விளைவாக, கேரள செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனை தற்போதைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொல்லப்பட்ட தலோல் அப்டோ மஹ்தியின் சகோதரர் அப்தெல்பட்டாஹ் மஹ்தி, “இந்த விவகாரத்தில் கருணை காட்ட முடியாது” எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்தோ-ஆசிய செய்தி சேவையிடம் பேசிய அப்தெல்பட்டாஹ் மஹ்தி, “குற்றத்திற்கு கருணை காட்ட முடியாது. பிரியா ஏமன் நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட மரணதண்டனையை எதிர்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்த அவர், குற்றம் சாட்டப்பட்டவரை பாதிக்கப்பட்டவராக இந்திய ஊடகங்கள் சித்தரிக்கின்றன எனவும் விமர்சித்துள்ளார்.
சன்னி முஸ்லிம் தலைவர் காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் மூலம், ஏமன் பிரபல சூஃபி மதகுருவான ஷேக் ஹபீப் உமர் மூலம் உயிரிழந்த மஹ்தி குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அவரது சகோதரர் இப்படியான கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
July 16, 2025 9:07 PM IST
செவிலியர் நிமிஷா மரண தண்டனை தள்ளிவைப்பில் திடீர் சிக்கல்! மறுப்பு தெரிவிக்கும் பாதிக்கப்பட்டவரின் சகோதரர்

