Last Updated:
பெங்களூருவின் நெலமங்களா பகுதியில் செயின் பறிப்பு சம்பவத்தால் அதிர்ச்சியில் அப்பாவிப் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூருவில் வீட்டு வாசலில் வைத்து மர்ம நபர் ஒருவர், செயின் பறிப்பில் ஈடுபட்ட அதிர்ச்சியில் அப்பாவிப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண் உயிரை காவு வாங்கிய செயின் பறிப்பு சம்பவத்தின் பின்னணி என்ன?
பெங்களூருவில் 9 சவரன் தங்க சங்கிலியை பறித்த அதிர்ச்சியில், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பெண் உயிரிழந்துள்ளார். கொள்ளையர்களால் அப்பாவிப் பெண்ணின் உயிர் பறிபோன கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன?
பெங்களூருவின் நெலமங்களா அருகே உள்ள ஹுஸ்கூர் பகுதியில் 45 வயதான ஜோதி என்பவர் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக புறப்பட்டு வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டு வாசலில் டூவிலரில் காத்திருந்த மர்ம நபர், ஜோதியைக் கண்டதும் வண்டியை ஸ்டார்ட் செய்து ஒரு U turn அடித்து, அவரின் 9 சவரன் தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு அசுர வேகத்தில் பறந்தார். அச்சம்பவத்தின் அதிர்ச்சியில் கத்திக்கொண்டே திருடனை துரத்தியபடி ஓடிய ஜோதி, திடீரென்று அங்கேயே சுருண்டு விழுந்தார்.
சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த பக்கத்து வீட்டுக்காரர், ஜோதியின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு நெலமங்கலாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அங்கு ஜோதியின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தனர். அதைக் கேட்டதும் ஜோதியின் குடும்பத்தினர் மட்டுமல்லாது அப்பகுதி மக்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இச்சம்பவம் தொடர்பாக மடநாயக்கனஹள்ளி காவல் நிலைய போலீசார் விசாரணை களத்தில் இறங்கினர்.
ஜோதியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, மூத்த அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்திய பின்னர், கொள்ளை மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட கொடூர நபர்களைத் தேடி வருகின்றனர்.
செயின் பறிப்பு சம்பவத்தால் அதிர்ச்சியில் அப்பாவிப் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Bangalore,Karnataka


