மலேசியர்கள் இலக்கவியல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொள்ளவும், திறனை மேம்படுத்தவும் இலக்கவியல் அமைச்சு இலவச பயிற்சிகளை வழங்குவதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ தமதறிக்கையில் தெரிவித்தார்.
இலக்கவியல் அமைச்சின் கீழ் இயங்கும் MyDIGITAL Corporation இந்தப் பெருமுயற்சியை மேற்கொண்டிருக்கின்றது. இலக்கவியல் தொழில்நுட்ப அறிவின் வழி மக்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதோடு, உலகளாவிய நிலையில் போட்டியாற்றல்மிக்கவர்களாகவும் விளங்க முடியும் என தாம் நம்புவதாக கோபிந்த் சிங் கூறினார்.
நாடு இலக்கவியல் தொழில்நுட்பத்தில் முன்னேற முக்கிய அம்சமாக விளங்குவது மக்களுக்கான இலக்கவியல் தொழில்நுட்ப அறிவாகும். இலக்கவியல் செயற்கை நுண்ணறிவு ஒரு சாராருக்கும் மட்டுமே என அல்லாமல்,அனைத்துத் தட்டு மக்களூக்கும் இலக்கவியல் செயற்கை நுண்ணறிவுத் திறனும், அதன் தேவைக்கான விழிப்புணர்வும் இருத்தல் அவசியம்.
அரசாங்கத்தோடு இணைந்து தனியார் நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செயல்படுவதன் வழி மக்கள் இந்தத் துறையில் சிறந்து விளங்க இயலும். ஆக அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பின் வழி சிறந்ததொரு இலக்கவியல் எதிர்காலத்தை நம் நாடு வடிவமைக்க இயலும் என அமைச்சர் கூறினார். ரக்யாட் டிஜிட்டல் (Rakyat Digital) என்பது அரசாங்கத்தையும், Cybersecurity Malaysia, Intel, iTrain, Microsoft, Trainocate போன்ற தொழில்துறைக் கூட்டமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சியாகும்.
இந்த முயற்சியில் துறைசார் வல்லுனர்களும் அரசாங்க உயர்அதிகாரிகளும் இணைந்து செயல்படுவர். அதோடு துறைசார் வல்லுனர்களும் தனியார் நிறுவனங்களூம் எந்தக் கட்டணமும் இன்றி இந்தப் பயிற்சிகளை வழங்குவதன் காரணத்தால் அதிகமான மலேசியர்கள் இதில் பங்குகொண்டு பயன்பெறலாம்.
இலக்கவியல் அமைச்சின் பயிற்சிகள் கீழ்வருமாறு:
i. CyberSAFE® untuk Rakyat –அடிப்படை இலக்கவியல் தொழில்நுட்ப – தரவு பாதுகாப்பு
ii. Generative AI – செயற்கை நுண்ணறிவுஉள்ளடக்கங்களின் செயல்பாடுகள், உக்திகள் மற்றும் அன்றாட வாழ்வியலுக்கான பயன்பாடுகள்
iii. Cloud untuk Rakyat – மேகக் கணினி பயன்பாடு,பாதுகாப்பு மற்றும் அன்றாட பயன்பாடுகள்
iv. Blockchain untuk Rakyat – தொடர்பான கருத்துகள், அதன் பயன்பாடுகள், மேலும் மலேசியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தில் அதன் பங்கு குறித்து விரிவாக விளக்குகிறது
மேற்கண்ட பயிற்சிகள் மட்டும் அல்லாது, இன்னும் பல முக்கிய பயிற்களை வழங்க இலக்கவியல் அமைச்சு தயாராக உள்ளது என அமைச்சர் கோபிந்த் சிங் தமதறிக்கையில் தெரிவித்தார். ஆக மலேசிய இந்தியர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலதிக தகவல்களுக்கு rakyatdigital.gov.my. அகப்பக்கத்தை நாடலாம்.



