(எம். அன்பா)
செமினி, ஏப். 2-
மித்ரா நிதியுதவியுடன் செமினி கபடி கிளப் நடத்தும் கபடி விளையாட்டின் வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர் மாநிலம், உலுலங்காட் மாவட்டம் அளவிலான 7 முதல் 29 வயது வரையிலான 70விளையாட்டாளர்கள் பதிவு செய்துள்ளனர் என்று கிளப் தலைவர் பாலமுருகன் குணசேகரன் கூறினார்.
2024ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி முதல் டிசம்பர் 29ஆம் தேதி வரை இந்தப் பயிற்சிகள் நடைபெறும்.
இந்த பாரம்பரியமிக்க கபடி விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 104 நாட்கள் ஒவ்வொரு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை அத்லோன் டிஃபுட்சால், புரோகா, செமினி எனும் இடத்தில் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.
கபடி விளையாட்டுத் துறையில் நன்கு தேர்ச்சி பெற்ற பயிற்றுநர்களின் வழிகாட்டலால் பெண்கள் விளையாட்டுகளுக்கு செமினி கபடி கிளப் தலைவர் ஜி.பாலமுருகன், பி.ஜெகன்குமார், ஜி.பாலஜோதி, வி.சுரேன்குமார், என். லோகேஸ்வரி, பெண்கள் அணி மேலாளர் ஏ. ஷாலினி, ஆண்கள் அணி மேலாளர் பி. குணசேகரன் ஆகியோர் பயிற்சி வழங்கி வருகின்றனர். சுக்மாவில் கபடிப் போட்டியில் பங்கேற்பதற்கு நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள் கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

