நியூயார்க்,கர்நாடகாவின் மேற்கு பெங்களூரு நகரில் ஸ்ரீகந்தடா கவால் பகுதியை சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா (22 வயது). சென்னை ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவரான சாகேத் மேல் படிப்பு படிப்பதற்காக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு சென்றுள்ளார்.
அவர் பெர்க்லி நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ரசாயன மற்றும் உயிர் மூலக்கூறு என்ஜினீயரிங் பிரிவில் முதுநிலை படிப்பை படித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், கடந்த 9-ந்தேதி அவர் காணாமல் போனார். அவருடைய பாஸ்போர்ட் மற்றும் லேப்டாப் இருந்த பை ஒன்று, பார்க் ஹில்ஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் மற்றும் நீச்சல் வீரர்கள், அருகேயிருந்த அன்ஜா ஏரியில் குதித்து தேட தொடங்கினர்.
இதில், அவருடைய உடல் அன்ஜா ஏரியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளது. சாகேத்தின் உடலை இந்தியாவுக்கு விரைவில் அனுப்பி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு, அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவது உள்ளிட்ட அனைத்து தேவையான உதவிகளையும் வழங்க தயாராக இருக்கிறோம் என சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.




