சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி விளையாடக்கூடிய கடைசி போட்டி குறித்து அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்த கருத்துக்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
சென்னை அணிக்காக தோனி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 15 சீசன்கள் வரை விளையாடி உள்ளார். ஒட்டுமொத்தமாக தோனி தனது 18 ஆவது ஐபிஎல் சீசனை விளையாட தயாராகி வருகிறார். அன் கேப்டு (UnCapped) ஆட்டக்காரர் பட்டியலில் இடம் பெற்றிருந்த தோனியை சென்னை அணி 4 கோடி ரூபாய் வழங்கி அணியில் தக்க வைத்து கொண்டுள்ளது.
கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு ரூ. 18 கோடியும், வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரனாவுக்கு 13 கோடி ரூபாயும், ஆல் ரவுண்டர் ஷிவம் துபேவுக்கு ரூ. 12 கோடியும், ரவீந்திர ஜடேஜாவுக்கு 18 கோடி ரூபாயும் வழங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்து கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஏலத்திற்கான மொத்த தொகையான 120 கோடி ரூபாயில் 65 கோடியை காலி செய்துள்ளது சென்னை அணி. இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி 55 கோடி ரூபாய் தொகையுடன் பங்கேற்க உள்ளது. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேட்டி அளித்துள்ளார்.
அவரிடம் தோனியின் கடைசி சீசன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது-
தோனியை பொறுத்த அளவில் அவர் எல்லாவற்றையுமே ரகசியமாக வைத்துக் கொள்வார். கடைசி நேரத்தில் தான் அவர் என்ன சொல்கிறார் என்பது தெரியவரும். சென்னை அணி மீதான அவரது பேரார்வத்தை எல்லோரும் அறிவார்கள்.
தோனி ஒருமுறை தனது கடைசி ஆட்டத்தை சென்னையில் தான் விளையாடுவேன் என்று கூறியிருந்தார். அதன் அடிப்படையில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று நினைக்கிறேன். அவர், தான் இனி விளையாடப் போவதில்லை என்று சொல்லும் வரையில் அவர் சென்னை அணியில் இருக்கலாம் என்று தெரிவித்தார்
.
&w=750&resize=750,375&ssl=1)
