சென்னை:
நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படத்தின் பணிகள் தற்போது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ‘ஆவேசம்’ புகழ் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கும் இப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்து வருகிறார்.
பரபரப்பான இப்படத்தின் கதைக்களத்தில், இறுதிக்கட்டத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ரசிகர்களுக்குப் பெரிய ஆச்சரியத்தைத் தரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ‘சர்ப்ரைஸ்’ வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று படக்குழு நீண்ட நாட்களாக ஆலோசித்து வந்தது.
இந்தச் சூழலில், அந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் சிலம்பரசன் (STR) பொருத்தமாக இருப்பார் என்று நஸ்ரியா ஒரு யோசனையைத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ஜித்து மாதவன் உடனடியாக சிம்புவைத் தொடர்புகொண்டு கதையைக் கூறியுள்ளார். கதையின் தன்மையும், கதாபாத்திரத்தின் வலிமையும் பிடித்திருந்ததால், “கண்டிப்பாக நடிக்கிறேன்” என சிம்பு உடனே சம்மதம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தப் படத்தில் நடிக்க சிம்பு மறுத்துவிட்டதாகத் தகவல்கள் பரவின. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, படக்குழு எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் நாட்களை ஒதுக்கித் தந்து, படப்பிடிப்பில் கலந்துகொள்ள சிம்பு தயாராகிவிட்டாராம்.
சூர்யா – சிம்பு ஆகிய இரு பெரும் நட்சத்திரங்கள் ஒரே திரையில் இணையவுள்ள இந்தத் தகவல், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




