இந்தியா்களின் முதலீடு அதிகபட்சமாக 2006-ஆம் ஆண்டு ரூ.59,500 கோடியாக இருந்தது. அதன் பிறகு, 2011, 2013, 2017, 2020, 2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் தொடா்ச்சியாக குறைந்து வந்துள்ளது. 2018 இல் 11 சதவீதமும், 2017 இல் 44 சதவீதமும் குறைந்த பிறகு 2019 இல் 7 சதவீத அதிகரிப்பைக் காட்டியது.
இந்நிலையில், வியாழக்கிழமை அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டு சுவிஸ் வங்கியில் தனிநபர், கிளை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை மூலம் முதலீடு செய்த பணம் ஒரே ஆண்டில் மூன்று மடங்காக அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 600 கோடியாக உள்ளது. இது தனிநபர் முதலீட்டில் இந்திய மதிப்பில் வெறும் 11 சதவீதம் மட்டுமே உயர்ந்து ரூ.3 ஆயிரத்து 675 கோடியாக உள்ளது. இதில் பெரும்பாலான முதலீடு வங்கிகள், நிதி நிறுவனங்களின் கணக்குகளிலே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது முந்தைய ஆண்டுகளை விட கணிசமான உயர்வாக இருப்பினும், மொத்த நிதியில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே உயர்ந்துள்ளது. இந்தியர்களின் முதலீடு இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.
இது இந்திய அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான தரவு பகிர்வாக இருந்தாலும் வரி ஆய்வுக்கு உட்பட்டது.
பிரிட்டன் முதலிடம்:
சுவிஸ் வங்கிகளில் அதிக முதலீடு செய்துள்ள வெளிநாட்டினரின் பட்டியலில் பிரிட்டன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
மேற்கு இந்திய தீவுகள், ஜொ்மனி, பிரான்ஸ், ஹாங் காங், லக்சம்பர்க், சிங்கப்பூா், பஹாமாஸ், குர்ன்சி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன. பட்டியலில் 2022-ஆம் ஆண்டு 44-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 67 வது இடத்திலும் நிகழாண்டில் 48-ஆவது இடத்துக்கு வந்துள்ளது.
இந்தியாவில் உள்ள பெருமுதலாளிகள் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யும் பணத்தை ‘கருப்புப் பணம்’ என்று கருத முடியாது என்று சுவிட்சர்லாந்து அதிகாரிகள் கூறி வருகின்றனர், மேலும் வரி மோசடி மற்றும் ஏய்ப்புக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவை தீவிரமாக ஆதரிக்கின்றனர்.
வரி விவகாரங்களில் சுவிட்சர்லாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே தானியங்கி தகவல் பரிமாற்றம் 2018 முதல் நடைமுறையில் உள்ளது. இதனடிப்படையில் 2018 முதல் சுவிஸ் நிதி நிறுவனங்களில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து இந்திய பெருமுதலாளிகள் முதலீடு தகவல்களை முதன்முறையாக செப்டம்பர் 2019 இல் இந்திய அதிகாரிகளுக்கு வழங்கியது. மேலும் இது தொடர்பான தகவல்கள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

