எல். கே. ராஜ்
கோலாலம்பூர்:
கிரேப் மலேசியா நிறுவனத்தைச் சேர்ந்த இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள் பி-ஹெய்லிங் உணவு அனுப்புவோர் என கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சுயதொழில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

இது அவர்கள் பதிவு செய்துகொண்ட நாளில் இருந்து 12 மாதங்களுக்கான பாதுகாப்பாகும் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் நேற்றுத் தெரிவித்தார்.

2024 வரவு செலவுத் திட்டத்தில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இவர்களுக்கான சந்தாவில் 90 விழுக்காட்டை அரசாங்கம் செலுத்துகின்ற நிலையில் எஞ்சிய 10 விழுக்காட்டை கிரேப் மலேசியா நிறுவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இ-ஹெய்லிங் ஓட்டுநர், பி-ஹெய்லிங் உணவு அனுப்புவோர் விபத்தில் சிக்கினால் அவர்களுக்கு முழுமையான நிதிப் பாதுகாப்பு வழங்குவதற்கு சுயதொழில் சமூகப் பாதுகாப்புத் திட்டம் பெரும் துணையாக இருக்கும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2004ஆம் ஆண்டு தொடங்கி கடந்த மே 24ஆம் தேதி வரை இப்பிரிவில் பதிவு செய்துகொண்டவர்களுள் 2,033 பேர் பெர்கேசோ உதவியைப் பெற்றிருக்கின்றனர். 20 துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு 8.9 மில்லியன் ரிங்கிட் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. அதேசமயத்தில் இ-ஹெய்லிங், பி-ஹெய்லிங் துறையைச் சேர்ந்த 631 பேருக்கு 3.3 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டிருக்கிறது என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
சுயதொழில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் குறிப்பிடத்தக்க தொகை வழங்கப்பட்டிருப்பதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
2024 மே 24ஆம் தேதி வரை 622,473 சந்தாதாரர்கள் பெர்கேசோவில் சுயதொழில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிந்து கொண்டுள்ளனர் என்று இங்கு ஹோட்டல் ரோயல் சூலானில் கிரேப் மலேசியா – கெசுமா பெர்கேசோ புரிந்துணர்வு ஒப்பந்தக் கையொப்பமிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஸ்டீவன் சிம் இத்தகவலைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கெசுமா துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜி அப்துல் ரஹ்மான் முகமட், கெசுமா தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ கைருல் டிஸாய்மி டாவுட், பெர்கேசோ வாரியத்தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால், பெர்கேசோ தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகம்மட் அஸ்மான் அஸிஸ் முகம்மட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டின் பொருளாதாரம் துரித வளர்ச்சி கண்டுவரும் நிலையில் மிக எளிதான முறையில் ஆக்கப்பூர்வமான தளர்வுகள், மக்கள் பயனடையும் திட்டங்களை முன்னெடுப்பதில் பெர்கேசோ அதீத அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என்பதை அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு பிரதிபலிக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
மலேசிய மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவுசெய்வதில் கிரேப் மலேசியா உணவு அனுப்புவோரும் ஓட்டுநர்களும் மிக முக்கியப் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்களின் நலன்காக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இலவசக் காப்புறுதி வழங்கப்படுகிறது. இது கிரேப் ஓட்டுநர்கள், உணவு அனுப்புவோர் பாதுகாப்பை உறுதி செய்கிறது. விபத்து நிகழும்பட்சத்தில் அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்குப் பொருளாதார உதவி அவர்களின் நிதிச்சுமையைக் குறைப்பதற்கு உதவும் என்று ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
The post சுயதொழில் சமூகப் பாதுகாப்புத் திட்டம்; கிரேப் மலேசியா ஓட்டுநர்கள் உணவு அனுப்புவோர் பதிவு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

