இந்திய வம்சாவளியான நிகேஷ் அரோரா, 2023ஆம் ஆண்டில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் இரு தொழில்நுட்ப ஜாம்பவான்களின் வருவாயையும் விஞ்சி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். இது ஏதோ ஒரு நாளில் கிடைத்த வெற்றியல்ல. பல வருட கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் ஏராளமான நிராகரிப்புகள் போன்றவை அவரை உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவராக மாற்றியது.
கல்வி
உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பிறந்த நிகேஷ் அரோரா, இந்திய விமானப்படையில் பணியாற்றி வந்த தனது தந்தையின் வாழ்க்கை அவரை ஒழுக்கமான மனிதராக வடிவமைத்தது. விமானப்படை பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, அவர் வாரணாசியில் உள்ள IIT-BHU-வில் பொறியியல் பயின்றார். வெளிநாட்டில் படிக்க நிறைய செலவாகும் என்றாலும், அதை அவரது விருப்பம் கட்டுப்படுத்தவில்லை. எனவே, அரோரா விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களாக பார்த்து விண்ணப்பித்தார்.
அப்போது அவரிடம் 100 அமெரிக்க டாலர்கள் மட்டுமே (1990இல் தோராயமாக ரூ.1700) இருந்தது. பாஸ்டனில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் 1990-ல் அவருக்கு உதவித்தொகை வழங்கியதோடு, ஆச்சரியப்படும் விதமாக கணினி அறிவியலை கற்பிக்கும் வாய்ப்பையும் வழங்கியது.
ஹ்யூமன் ஆஃப் பாம்பே உடனான உரையாடலில் தான் சந்தித்த சவால்கள் மற்றும் ஆரம்பகால வாழ்க்கை குறித்து நிகேஷ் அரோரா மனம் திறந்து பேசினார். அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரியாகப் படித்த பிறகும், வேலைவாய்ப்பு தேடிய தொடக்கத்தில் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து 400 நிராகரிப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்.
இருப்பினும், சிறு வயதிலிருந்தே தைரியமும், ஒழுக்கமும் கொண்ட மனிதராக உருவெடுத்த அரோரா, நம்பிக்கையை இழக்காமல் உந்துதலாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த நிராகரிப்பு கடிதங்கள் அனைத்தையும் தன்னுடன் சேமித்து வைத்துக் கொண்டார். 1992ஆம் ஆண்டு ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸில் வேலை கிடைத்தபோது அவரது விடாமுயற்சிக்கு பலன் கிடைத்தது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் தனது தொழில் வாழ்க்கையில் உயர்ந்த பதவியில் முன்னேறி அந்நிறுவனத்தின் துணைத் தலைவரானார். பின்னர் அவர் தனது கேரியரை மேம்படுத்த நிதித்துறையில் எம்எஸ் பட்டப்படிப்பு மற்றும் சி.எஃப்.ஏ சான்றிதழைப் பெற்றார். 2004-ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்வதற்கு இந்த சிஎஃப்ஏ படிப்புதான் உதவியாக இருந்தது.
கூகுள் நிறுவனத்தில் பத்தாண்டுகள் வரை புணிபுரிந்த அரோரா, இந்த “அற்புதமான” பயணத்தின்போது கூகுளின் வருவாயை 2 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 60 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்த்த உதவினார். ஆனால், 2014இல் “இது வெளியேற வேண்டிய நேரம்” என்றும் “வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும்” என்றும் விரும்பி கூகுள் வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
நிகேஷ் அரோரா 2018ம் ஆண்டில் பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மேலும், அவர் இந்த நிறுவனத்தை கிளவுட் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவில் சிறந்த முன்னேற்றங்களை ஊக்குவிப்பதன் மூலம் வெறும் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 100 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள நிறுவனமாக மாற்றினார்.
இன்று இவரது சொத்து மதிப்பு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது இந்திய மதிப்பில் ரூ.12,474 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 2025 நிலவரப்படி பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் நிறுவனம் ரூ.11,283,000,000,000 சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது.
June 23, 2025 6:35 PM IST
சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லாவைவிட அதிக சம்பளம்… பல கோடி மதிப்பு நிறுவனத்தின் சிஇஓ… சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…?

