இந்த உத்தரவு மக்களின் உணவுத் தேர்வுகள் மீதான நேரடித் தாக்குதல் என்று எதிர்க்கட்சியான NCP (SP) மற்றும் சிவசேனா (UBT) தலைவர்கள் சாடியுள்ளனர். உரிமம் பெற்ற ஆடுகள், செம்மறி ஆடுகள், கோழிகள் மற்றும் பெரிய விலங்குகளின் கசாப்புக் கடைகள் உட்பட அனைத்து இறைச்சிக் கூடங்களும், ஆகஸ்ட் 14 நள்ளிரவு முதல் ஆகஸ்ட் 15 நள்ளிரவு வரை 24 மணி நேரம் மூடப்பட வேண்டும் என்று கே.டி.எம்.சி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த 24 மணி நேரத்தில் இறைச்சிக் கூடங்களில் விலங்குகள் கொல்லப்பட்டாலோ அல்லது இறைச்சி விற்கப்பட்டாலோ, மகாராஷ்டிரா நகராட்சி சட்டம், 1949-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று KDMC மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது குறித்து KDMC துணை ஆணையர் (உரிமங்கள்) கஞ்சன் கெய்க்வாட் கூறுகையில், பொது ஒழுங்கை உறுதி செய்வதையும், முக்கியமான தேசிய நிகழ்வுகளைக் கடைப்பிடிப்பதையும் நோக்கமாகக் கொண்ட குடிமைத் தீர்மானத்தின் ஒரு பகுதியாக 1988 முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த உத்தரவு வெளியிடப்படுகிறது என்றார்.
இந்த உத்தரவு குறித்து பேசிய மாநகராட்சி கூடுதல் ஆணையர் யோகேஷ் கோட்சே, “ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி விற்பனைக்குத் தடை உள்ளது. ஆனால், அதைச் சாப்பிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தெளிவுபடுத்தினார். மேலும் இந்த உத்தரவு புதியதல்ல என்றும் குடியரசு தினத்தன்றும் செயல்படுத்தப்படுகிறது” என்றும் கூறினார். எனினும், இந்த உத்தரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்வினையாற்றி உள்ளன.
உணவு விருப்பம் என்பது அவரவர் சுதந்திரம் என்பதை வலியுறுத்த ஆகஸ்ட் 15 அன்று ஆட்டிறைச்சி விருந்தை நடத்தப் போவதாக NCP (SP) MLA ஜிதேந்திர அவாத் அறிவித்துள்ளார். “மக்கள் சுதந்திரம் பெற்ற நாளில், அவர்கள் விரும்புவதை உண்ணும் சுதந்திரம் இதனால் பறிக்கப்படுகிறது” என்று அவர் கூறினார், மேலும் X-ல், “மக்கள் என்ன சாப்பிடுவார்கள், எப்போது சாப்பிடுவார்கள் என்பதைத் தீர்மானிக்க நீங்கள் யார்?” என்றும் பதிவிட்டுள்ளார்.
ஒருவர் என்ன சாப்பிட விரும்புகிறார் அல்லது சாப்பிடக்கூடாது என்பது அவர்களின் தனிப்பட்ட விஷயம். இந்தக் கட்டுப்பாடு நியாயமில்லை” என்று அவர் கூறினார். கல்யாண் (மேற்கு) எம்.எல்.ஏ.வும் ஆளும் சிவசேனா தலைவருமான விஸ்வநாத் போயிர், “ஒரு நாள் இறைச்சி சாப்பிடாமல் இருந்தால், என்ன நடந்துவிடும்? சாதாரண மக்கள் யாரும் இந்த உத்தரவு குறித்துப் புகார் செய்வதில்லை. நகராட்சி நிர்வாகம் குடிமக்களின் நலனுக்காகச் செயல்படுகிறது” என்று கூறி உத்தரவை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதனிடையே மக்களின் உணவுத் தேர்வுகளில் தலையிடுவதாகக் கூறி கேடிஎம்சி ஆணையரை இடைநீக்கம் செய்ய சிவசேனா (யுபிடி) தலைவர் ஆதித்ய தாக்கரே கோரியுள்ளார். “சுதந்திர தினத்தன்று நாம் சாப்பிடுவது நமது உரிமை, நமது சுதந்திரம். அன்றைய தினம் சைவம் சாப்பிடுவதா அல்லது அசைவம் சாப்பிடுவதா என்று அவர்கள் முடிவெடுக்க முடியாது. எங்கள் வீட்டில், நவராத்திரியில்கூட, எங்கள் பிரசாதத்தில் இறால், மீன் இருக்கும், ஏனென்றால் இது எங்கள் பாரம்பரியம், இது எங்கள் இந்து மதம்… இது மதம் சார்ந்த விஷயமும் அல்ல, இது தேசிய நலன் சார்ந்த விஷயமும் அல்ல. சுதந்திர தினத்தன்று “மக்கள் அசைவம் சாப்பிடலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய ஆணையர் யார்? நாங்கள் நிச்சயமாக அசைவம் சாப்பிடுவோம்” என்று கூறியுள்ளார்.
August 14, 2025 1:26 PM IST
சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை…! கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள்…

