கோலாலம்பூர்:
கடந்த புதன்கிழமை காலை 10.20 மணியளவில், சுங்கை பூலோ, புக்கிட் ரஹ்மான் புத்ரா (Bukit Rahman Putra) பகுதியில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (Perhilitan) மற்றும் புக்கிட் அமான் போலீசார் இணைந்து அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர்.
கைதுசெய்யப்பட்ட நபர் பிரபல சமூக ஊடகத் தொழில்முனைவோர் ஒருவரின் தம்பி என்று தெரியவந்துள்ளது.
வீட்டின் வலதுபுறம் உள்ள குளத்தில் மூன்று ஆமைகளும், பின்புறம் உள்ள குளத்தில் ஒரு ஆமையுமாக மொத்தம் 4 அரிய வகை ‘அலிகேட்டர் ஸ்னாப்பிங்’ ஆமைகள் மீட்கப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த ஆமைகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 20,000 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சோதனையின் போது அந்த இளைஞர் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்து திடீரென வீட்டிற்குள் சென்று கதவுகளைப் பூட்டிக்கொண்டு தப்ப முயன்றார். பின்னர் மாடிக்குச் சென்று ஒரு அறைக்குள் பதுங்கியிருந்த அவரை அதிகாரிகள் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அந்த ஆமைகளை வளர்ப்பதற்கான எவ்வித சட்டப்பூர்வ அனுமதியோ அல்லது உரிமமோ அவரிடம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது மனைவி மற்றும் இரண்டு இந்தோனேசியப் பெண்களிடமும் போலீசார் விசாரணை நடத்தியதுடன், கைது செய்யப்பட்ட இளைஞர் பின்னர் 10,000 ரிங்கிட் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மேலும் 2010-ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக, அவர் வரும் மார்ச் 23-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
இந்த வகை ஆமைகள் அவற்றின் வலிமையான தாடைகள் மற்றும் அரிய தோற்றத்திற்காகப் போற்றப்படுபவை, எனவே இவற்றை வளர்க்கக் கடுமையான விதிமுறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆவண மோசடி: மலாக்காவில் மியான்மார் ஏஜென்ட்டுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை!
கோலாலம்பூர், ஜனவரி 23: போலி ஆவணங்களைத் தயாரிக்கும் கும்பலின் ஏஜென்ட்டாகச் செயல்பட்ட 54 வயது மியான்மர் ஆடவர் சான் லூவினுக்கு (San Lwin), ஆயேர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 12 மாத சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
போலி கடப்பிதழ்கள், மற்றவர்களுக்குச் சொந்தமான கடப்பிதழ்கள், போலி ஐ-கார்டுகளை (i-Kad) வைத்திருந்ததுடன், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஆணையத்தின் (UNHCR) போலி அட்டையை உண்மையான ஆவணமாகப் பயன்படுத்திய 17 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
மாஜிஸ்திரேட் ஷர்தா ஷீனா முகமட் சுலைமான், 1966-ஆம் ஆண்டு கடப்பிதழ் சட்டம், குற்றவியல் சட்டத்தின் கீழ் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் 165 மாத சிறைத்தண்டனை விதித்த போதிலும், அவை அனைத்தும் ஏககாலத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
இதன்படி, கடந்த 2025 நவம்பர் 8-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து இந்த ஓராண்டு சிறைத்தண்டனை தொடங்குகிறது.
இதேவேளையில், மாலிம் ஜெயா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அந்த ஏஜென்ட்டிடம் ஆவணங்களைப் பெற்ற மியான்மர் தம்பதிகளான 31 வயது ஸாவ் நைங் மற்றும் 26 வயது கின் சாவ் வாய் ஆகியோருக்கும் முறையே ஆறு மாதமும் எட்டு மாதமும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மற்றொரு தனி விசாரணை நடவடிக்கையில், போலி அகதிகள் அட்டையைப் பயன்படுத்திய 18 வயது ரோஹிங்யா இளைஞர் முகமட் நூர் ஹைருலுக்கு 5,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
குடும்பச் சூழல், இளம் வயது போன்ற காரணங்களைக் கூறி அவர்கள் தரப்பில் கருணை கோரப்பட்ட போதிலும், நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் இத்தகைய சட்டவிரோதக் குடியேறிகள், மோசடிக் கும்பல்களுக்கு எதிராகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று துணை அரசு வழக்கறிஞர் ஷாஸா நூர் ஷெரிப் வலியுறுத்தினார்.




