சுங்கை பட்டாணி:
கெடா மாநிலத்தின் சுங்கை பட்டாணி பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் நலனுக்காக, பண்டார் புத்திரி ஜெயாவில் 10 மில்லியன் ரிங்கிட் செலவில் புதிய விளையாட்டு வளாகம் ஒன்று கட்டப்படவுள்ளது.
மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும், சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் முகமட் தவ்பிக் ஜொகாரி (Dr Mohammed Taufiq Johari) இத்தகவலைத் தெரிவித்தார்.
இந்த விளையாட்டு வளாகம் அமைப்பது, தான் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றது முதல் முன்னெடுத்து வரும் முக்கிய முயற்சியாகும்.
கோலா மூடா மாவட்டத் தகவல் அலுவலகத்திற்கு அருகிலுள்ள தளம் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும், இதற்கான முதற்கட்ட நிதியாக 10 மில்லியன் ரிங்கிட் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
புதிய விளையாட்டு வீரர்களை முறையாகப் பயிற்சி கொடுத்து உருவாக்குவதற்கு நவீன வசதிகளுடன் கூடிய வளாகம் அவசியம் என்பதை அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த வளாகத்தில் முறையான விளையாட்டுத் தளங்கள் மற்றும் இளைஞர்களுக்கான இதர வசதிகள் ஆகியன இடம்பெறும்.
தற்போது இதற்கான கொள்முதல் (Procurement) பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுப்பணித்துறை (JKR) மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து இப்பணிகள் கண்காணிக்கப்படும்.
தான் மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்தாலும், தனது சுங்கை பட்டாணி நாடாளுமன்றத் தொகுதிக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப் போவதாக அவர் கூறினார். வார இறுதி நாட்களில் பெரும்பாலும் தொகுதியிலேயே இருந்து மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விளையாட்டுத் துறையை ஒரு தேசத்தை ஒன்றிணைக்கும் தளமாகப் பயன்படுத்துவதே அமைச்சகத்தின் முக்கிய நோக்கம் என்று டாக்டர் முகமட் தவ்பிக் சுட்டிக்காட்டினார்.




