ஜெரான்டுட்:
நேற்று, சுங்கை பஹாங்கில் மீன்பிடிக்கச் சென்ற 14 வயது சிறுவன், ஜெரான்டுட் ஃபெரி பாலத்திற்கு கீழே தண்ணீரில் தவறி விழுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அஸ்ரி ஃபஹ்மி பஹியுதீன் ஜைபுல் அஃபாண்டி என்ற அந்த சிறுவன் ஜெரான்ட் மாவட்ட சபைக்கு சொந்தமான மிதக்கும் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மாலை 5 மணியளவில் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
சம்பவம் குறித்து, மாலை 5.15 மணிக்கு ஜெரான்டுட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக மாவட்ட காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் சுக்ரி முஹமட் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைகள் தீயணைப்பு வீரர்கள், குடிமைத் தற்காப்புப் படை (APM) உறுப்பினர்கள் மற்றும் கிராமவாசிகளின் உதவியுடன் மாலை 5.45 மணிக்குத் தொடங்கியது. இருள் சூழ்ந்ததால் நேற்று இரவு 8 மணியளவில் நடவடிக்கை நிறுத்தப்பட்டு இன்று காலை 8 மணியளவில் மீண்டும் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இன்று 30 க்கும் மேற்பட்ட SAR உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றும், இதுவரை பாதிக்கப்பட்டவர் மீட்கப்படவில்லை என்றும் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி சுல்ஃபாட்லி ஜகாரியா கூறினார் .


