Last Updated:
உத்தரபிரதேசத்தில், ராணுவ வீரர் கபில் கவாட் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் ராணுவ வீரரை கம்பத்தில் கட்டி வைத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த கபில் கவாட் என்பவர், இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர், இந்திய ராணுவத்தில் முக்கிய படைப் பிரிவுகளில் ஒன்றான ராஜ்புத் பிரிவில் அங்கம் வகிக்கிறார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தவர், மீண்டும் பணியில் சேருவதற்காக தனது உறவினருடன் காரில் சென்றுள்ளார். டெல்லிக்கு கார் மூலம் சென்றுவிட்டு, அங்கிருந்து விமானத்தில் காஷ்மீர் செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, சொந்த ஊரில் இருந்து டெல்லி நோக்கி செல்லும்போது, பூனி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளன. அதில், சிக்கிக் கொண்டால் உரிய நேரத்திற்கு விமானத்தை பிடிக்க முடியாது என்று கபில் கருதியுள்ளார். இதையடுத்து, தனது நிலை குறித்து சுங்கச்சாவடி ஊழியர்களிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
ஆனால், அங்கிருந்தவர்கள் ஸ்ட்ரிக்ட் ஆபீஸர் என்ற நினைப்பில் ராணுவ வீரரிடம் சட்டம் பேசியுள்ளனர். மேலும், தனது கிராமத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கு டோல் கேட்டில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறித்தும் அவர்களிடம் விளக்கியுள்ளார். அதற்கு, தங்களிடமே சட்டம் பேசுகிறாயா எனக் கூறி, சுங்கச்சாவடி ஊழியர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது, இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ராணுவ வீரரை சுங்கச்சாவடி ஊழியர்கள் சுற்றிவளைத்து தாக்கியுள்ளனர்.
கும்பலாக இருந்தவர்கள் கண்மூடித்தனமாக தாக்கியபோதும், தனியாளாக அவர் போராடியுள்ளார். ஒரு கட்டத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள், ராணுவ வீரரின் கைகளை பிடித்து, கம்பத்தில் கட்டி வைத்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிலும், ஒருவர் உருட்டுக்கட்டையை எடுத்து ஆக்ரோஷமாக தாக்கியுள்ளார். அத்துடன், கபில் உடன் வந்த உறவினரையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது.
இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ராணுவ வீரரின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அத்துமீறலில் ஈடுபட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இதில் தொடர்புடையவர்களையும் கைது செய்ய தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். உத்தரபிரதேசத்தில் விமானத்தை பிடிக்க விரைந்து சென்ற ராணுவ வீரருக்கு தடை போட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள், அவரை கம்பத்தில் கட்டி வைத்து கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
August 18, 2025 8:29 PM IST
சுங்கச்சாவடியில் ராணுவ வீரருக்கு நேர்ந்த கொடூரம்.. பணிக்கு திரும்பியபோது நடந்த பகீர் சம்பவம்!


