Last Updated:
சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஜி ஜின்பிங்கை தியான்ஜினில் சந்தித்து இருதரப்பு உறவு, எல்லை அமைதி, வர்த்தக விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாடு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு சீனாவின் தியான்ஜின் நகருக்கு சென்ற பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று காலை தியான்ஜின் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ரஷ்யாவின் கசான் நகரில் சீன அதிபரை சந்தித்துப் பேசிய பிறகு இரு நாட்டு உறவு மேம்பட்டிருப்பதாகவும், எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். எல்லை மேலாண்மை தொடர்பாக இருநாட்டு சிறப்பு பிரதிநிதிகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய பிரதமர், இரு நாட்டு உறவை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான பேச்சுவார்த்தை சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது. அமெரிக்காவின் வர்த்தக வரி விதிப்பு மற்றும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா, சீனா வீரர்கள் மோதல் நடந்த பிறகு இருநாட்டுத் தலைவர்கள் முதல்முறையாக சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
August 31, 2025 10:47 AM IST


