சீனி ஏற்றுமதியை நிறுத்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதால் ஏனைய நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் பிரேசில், தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்வது குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சீனி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.
போதுமான அளவு சீனி கையிருப்பு
இந்த ஏற்றுமதித் தடையானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு அதிகளவில் சீனி இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்தத் தடையின் காரணமாக மாற்று நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், தற்போது நாட்டிற்குள் போதுமான அளவு சீனி கையிருப்பு உள்ளதுடன், புதிய இருப்புகளை விரைவாக இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால் சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது என அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
ரூபாய்க்கு நிகரான டொலரின் மதிப்பு உயர்வடைந்ததன் காரணமாக தற்போது சந்தையில் சீனி விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தியா சீனி ஏற்றுமதியை நிறுத்தியதால் ஏற்பட்ட ஒன்றல்ல எனவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

