ஹாங்காங்:
சீனாவின் ஹுனான் வட்டாரத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 26 பேர் உயிரிழந்தனர்; 61 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து விரிவான விசாரணை நடத்தச் சீன அதிபர் ஸி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாகச் செவ்வாய்க்கிழமை (மே 5) அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்தது.
பட்டாசு உற்பத்திக்கான நடுவமாகத் திகழும் ஹுனானின் தலைநகரமான சாங்ஷாவில், மே 4ஆம் தேதி மாலை 4.40 மணியளவில் இந்த வெடிவிபத்து நடந்ததாகச் சீன அரசு ஊடகமான ‘சிசிடிவி’யும் சின்ஹுவா செய்தி நிறுவனமும் தெரிவிக்கின்றன.
இடிந்துவிழுந்த கட்டடங்களையும் அப்பகுதி முழுவதும் சிதறிக்கிடக்கும் குப்பைகளிலிருத்து அடர்ந்த புகை வெளியேறுவதையும் சீன இணையத்தளங்களில் வெளியான காணொளியில் பார்க்கமுடிந்தது.
500 தீயணைப்பு வீரர்கள், மீட்புப் படையினர், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு உடனடியாய் விரைந்ததாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்தது.
இந்த வெடிவிபத்து ஹுவாஷெங் பட்டாசு உற்பத்தி நிறுவனத்தில் நடந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.
வெடிவிபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சீன அதிபர் கூறியதாக சின்ஹுவா குறிப்பிட்டது.
The post சீனாவில் பட்டாசு ஆலை விபத்தில் 26 பேர் மரணம்; 61 பேர் காயம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

