கடந்த மாதம் 18ம் தேதி புனே லோஹாகட் கோட்டையிலிருந்து, தொழிலதிபர் கேதன் அகர்வாலை, அவருக்கு நிச்சயிக்கப்பட்ட ஷியாவும், காதலன் சேத்தன் சௌத்திரியும் சேர்ந்து மலை உச்சியில் இருந்து 400 அடி பள்ளத்தில் தள்ளி கொலை செய்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளான நிலையில், சியாவும், சேத்தனும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த விசாரணையில், அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கைது செய்யப்பட்டுள்ள இருவரது செல் போன்களில் இருந்து அழிக்கப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ்களை மீட்டெடுத்த புனே போலீஸாருக்கு, அடுத்த அதிர்ச்சித் தகவலாக இருவரும் 4 மாதங்களுக்கு முன்பே உள்ளூர் பதிவாளர் அலுவலகம் ஒன்றில் அதிகாரப்பூர்வமாக ரகசியத் திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இந்த திருமணத்தை உறுதி செய்வதற்காக, இந்திய திருமணச் சட்டத்தின் கீழ் திருமணச் சான்றிதழ் உள்ளதா? என காவல்துறை சரிபார்த்து வருகிறது. சாட்சிகளாக கையெழுத்திட்டதாகக் கூறப்படும் கோயலின் இரண்டு கல்லூரி நண்பர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இருவரும் திருமண மாலை அணிந்திருந்தது போன்ற புகைப்படம் ஒன்றை அவர்களது இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து மீட்கும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் ஒரு சாதாரண முக்கோணக் காதலாக பார்க்கப்பட்ட இந்த விவகாரத்தில், போலீஸார் நடத்திய தடயவியல் சோதனை பல்வேறு உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இந்த டிஜிட்டல் சான்றுகள் ஒட்டுமொத்த விசாரணைக் குழுவையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்போன்களிலிருந்து கடந்த இரண்டு மாத காலத்துக்கான போன் கால்கள், லொக்கேஷன் தரவுகள், சாட்டிங்குகள் மற்றும் கூகுள் ஹிஸ்ட்ரி ஆகியவற்றை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
இந்த டிஜிட்டல் தரவுகள் தான் இவர்களது திருமணத்தை காட்டிக் கொடுத்துள்ளது. இந்த ரகசியத் திருமணத்திற்குப் பிறகுதான், தங்களது ரகசிய வாழ்க்கை வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, கேதனைத் தீர்த்துக்கட்ட ஷியாவும் சேத்தனும் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். முன்னதாக கடந்த ஜூன் 14ஆம் தேதியன்று ஷியா கோயல், கேதனை கொல்வதற்காக ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், கடைசி நிமிடத்தில் ஷியாவிற்குத் துணிச்சல் இல்லாததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்தத் தோல்விக்குப் பிறகு, சியா உடனடியாகக் காதலர் சேத்தன் சவுத்ரிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், “எனக்கு தனியாக இதைச் செய்யத் துணிச்சல் இல்லை, நீயும் வா. நாம் இருவரும் சேர்ந்து அவனைப் பள்ளத்தில் தள்ளிவிடுவோம்” என்று அவர் அனுப்பிய மெசேஜை, சைபர் போலீசார் மீட்டெடுத்துள்ளனர்.
தாங்கள் செய்யப்போகும் கொலையில் எந்தவித தவறும் நடந்து விடக் கூடாது என்பதற்காகவும், கொலைக்குப் பின் போலீசாரிடம் சிக்கிவிடாமல் தப்பிப்பது எப்படி? என்பது குறித்தும் தீவிரமாக இணையத்தில் தேடியிருக்கின்றனர். சோனம் ரகுவன்சி என்பவர் தனது கணவன் ராஜாவை மேகாலயா அழைத்துச் சென்று கொலை செய்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மற்றொரு கொலை வழக்காகும்.
இந்த கொலை வழக்கை இணையத்தில் தேடித்தேடி படித்த இவர்கள், அந்த கொலை சம்பவத்தில், சோனம் செய்த தவறுகளை தாங்கள் செய்து விடக் கூடாது என்பதற்காக தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர். அதன்படி அத்தனை திட்டம் போட்டு கொலையை அரங்கேற்றியபோதும், அவர்களது டிஜிட்டல் தரவுகள் துல்லியமாக அவர்களைக் காட்டிக் கொடுத்தது தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

