கோலாலம்பூர், ஏப்ரல் 15:
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சீக்கிய வழிபாட்டுத் தலமான ‘தட் கல்சா திவான்’ (Tatt Khalsa Diwan) குருத்வாராவில் நடைபெற்ற வைசாகி (Vaisakhi) கொண்டாட்டங்களில், திதிவாங்சா நாடாளுமன்ற உறுப்பினரும், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ஜோஹாரி அப்துல் கானி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வின் போது, ஏற்கனவே தான் உறுதியளித்திருந்த 50,000 ரிங்கிட் நன்கொடையை குருத்வாரா நிர்வாகத்திடம் அமைச்சர் முறையாக வழங்கினார். மேலும், குருத்வாராவின் மின்சாரச் செலவுகளைக் குறைக்க சூரியசக்தி (Solar) மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவுவதற்கான நிர்வாகத்தின் கோரிக்கையைக் கேட்டறிந்த அமைச்சர், இதனைச் செயல்படுத்த அரசாங்கம் சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார்.
மலேசியாவின் தேசக் கட்டமைப்பில் சீக்கிய சமூகத்தின் பங்களிப்பு ஈடு இணையற்றது என்று புகழ்ந்த அமைச்சர் ஜோஹாரி, பாதுகாப்புத் துறை (இராணுவம் மற்றும் காவல்துறை), சட்டத்துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் அவர்களின் அர்ப்பணிப்பு மலேசியாவிற்குப் பெருமை சேர்ப்பதாகக் குறிப்பிட்டார்.
“சீக்கியர்களின் ‘சேவா’ (Seva) அல்லது தன்னலமற்ற சேவை மனப்பான்மை, மலேசியாவின் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரி. இத்தகைய உயர்ந்த குணாதிசயங்களே நாட்டின் ஒற்றுமைக்கு வலுசேர்க்கின்றன,” என்று அவர் தனது உரையில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தற்போதைய மத்திய கிழக்கு பதற்றமான சூழலால் உலகளாவிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும் அமைச்சர் விவரித்தார். சவாலான காலக்கட்டத்திலும் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய அரசாங்கம் எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளக்கிய அவர், ஒற்றுமையே இக்கட்டான சூழலில் இருந்து தேசத்தைக் காக்கும் கேடயம் என்பதை வலியுறுத்தினார்.
இந்நிகழ்வு, பல்வேறு சமூகங்களை ஒன்றிணைப்பதிலும், மலேசியாவின் பன்முகத்தன்மையை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.




