புதிய மெகசின் சிறைச்சாலையில் பதற்றம் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே குறித்த சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பான தகவல்களை இரகசியமாகத் திரட்டி, அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை, சகஸ்புர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், அண்மையில் புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின்போது உயிரிழந்த மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தவர் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர் கடந்தாண்டு தெஹிவளை, வட்ரப்பல வீதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டைக் கொலைச் சம்பவத்துடனும் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறார். அந்தச் சம்பவத்தின் போது மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் பயணித்த மோட்டார் சைக்கிளை சந்தேகநபரே செலுத்தியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், புதிய மெகசின் சிறைச்சாலையில் பதற்றம் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே குறித்த சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் ‘கொஸ் மல்லி’ என்றழைக்கப்படும் குற்றவாளியின் நெருங்கிய சகாவாகவும் இந்த சந்தேகநபர் செயற்பட்டு வந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபரின் கைபேசியை பொலிஸார் சோதனை செய்தபோது, ‘கொஸ் மல்லி’ என்பவருடன் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு தொலைபேசி உரையாடல்களின் குரல் பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த குரல் பதிவுகளை ஆய்வு செய்தபோது, சில சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பான தனிப்பட்ட மற்றும் பணிசார் தகவல்கள் திரட்டப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும், சேகரிக்கப்பட்ட தகவல்கள் வெறுமனே அறிந்து கொள்வதற்காகப் பெறப்பட்டவையா அல்லது குறிப்பிட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் திரட்டப்பட்டவையா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சந்தேகநபரின் கைபேசியில் கிடைத்துள்ள குரல் பதிவுகள் மற்றும் ஏனைய தகவல்கள், இந்த சம்பவத்தின் பின்னணியில் மேலும் சில நபர்களின் தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான முக்கிய ஆதாரங்களாக அமையக்கூடும் என விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதனையடுத்து, சந்தேகநபருக்கும் சிறைச்சாலை பதற்றச் சம்பவத்திற்கும் இடையிலான தொடர்பு, வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் ‘கொஸ் மல்லி’யுடனான தொடர்புகள் மற்றும் சிறை அதிகாரிகள் தொடர்பாக திரட்டப்பட்ட தகவல்களின் நோக்கம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசி உள்ளிட்ட சாதனங்களில் உள்ள தகவல்களை மேலதிகமாக ஆய்வு செய்து, இந்த விவகாரத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஏனைய நபர்கள் தொடர்பிலும் விசாரணைகள் விரிவுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

