International
oi-Nantha Kumar R
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். சிறையில் அவர் பல்வேறு துன்பங்களை சந்தித்து வரும் நிலையில் அவரது முன்னாள் மனைவி ஜெமிமா கோல்ஸ்மித் தனது 52வது வயதில் பெரும் கோடீஸ்வரரை திருமணம் செய்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மாஜி பிரதமருமான இம்ரான் கான் தற்போது ஊழல் வழக்கில் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவர் துன்புறுத்தப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் இம்ரான் கான் இறந்துவிட்டதாக அவ்வப்போது வதந்திகள் பரப்பி வருகின்றனர்.

இதற்கிடையே தான் இம்ரான் கானின் முன்னாள் மனைவி தனது 52வது வயதில் 2வது திருமணம் செய்துள்ளார். அதாவது இம்ரான் கான் மொத்தம் 3 திருமணம் செய்துள்ளார். முதல் மனைவி பெயர் ஜெமிமா கோல்ட்ஸ்மித். இவர் சினிமா தயாரிப்பாளர். இவரை இம்ரான் கான் கடந்த 1995ம் ஆண்டு திருமணம் செய்தார். அதன்பிறகு கடந்த 2004ம் ஆண்டில் அவர்கள் விவாகரத்து பெற்றனர்.
பிறகு இம்ரான் கான் பத்திரிகையாளர் ரேஹம் கான் என்பவரை 2015ம் ஆண்டு ஜனவரி 8 ம் தேதி 2வது திருமணம் செய்தார். இந்த திருமணம் 2015அக்டோபர் 22ம் தேதியுடன் முறிந்தது. இருவரும் விவாகரத்து பெற்றனர். பிறகு 2018 ம் தேதி இம்ரான் கான் புஷ்ரா பீபி என்ற ஆன்மிக வழிகாட்டியை 3வது திருமணம் செய்தார். தற்போது ஊழல் வழக்கில் இம்ரான் கானுடன், புஷ்ரா பீபியும் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் தான் இம்ரான் கானுக்கு முதல் மனைவியாக இருந்த ஜெமிமா கோல்ட்ஸ்மித்துக்கு தற்போது 52 வயது ஆகிறது. இவர் பிரிட்டன் தலைநகர் லண்டனில் பிறந்தவர் என்பதால் தற்போது அங்கு வசித்து வருகிறார். இம்ரான் கான் – ஜெமிமா கோல்ட்ஸ்மித் தம்பதிக்கு மொத்தம் 2 மகன்கள் பிறந்தனர். ஒருவரின் பெயர் சுலைமான், இன்னொருவரின் பெயர் காசிம். இவர்கள் 2 பேரும் பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளனர்.
தற்போது இம்ரான் கானுக்கு ஆதரவாகவும், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு எதிராகவும் கருத்துகளை கூறி வருகின்றனர். அதேபோல் இம்ரான் கான் சிறை வைக்கப்பட்டு இருப்பதற்கு எதிராக ஜெமிமா கோல்ட்ஸ்மித் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.
இது கவனம் பெற்றது. இப்படியான சூழலில் தான் ஜெமிமா கோல்ட்ஸ்மித் 2வது திருமணம் செய்துள்ளார். பெரும் கோடீஸ்வரராக இருக்கும் கேமரூன் ஓ ரெய்லி என்பவரை கரம்பிடித்துள்ளார். ஜெமிமாவின் கணவரான கேமரூன் பைனான்சியராக உள்ளார். இவருக்கு வயது 62. இவர் அயர்லாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் தொழிலதிபராக உள்ளார்.
ஜெமிமா கோல்ட்ஸ்மித் அடிப்படையில் சினிமா தயாரிப்பாளர். இதனால் கேமரூன் ஓ ரெய்லியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவருக்கும் காதலாக மலர்ந்த நிலையில் தற்போது கரம் பிடித்துள்ளார். இந்த திருமணத்தை ஜெமிமாவின் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக ஜெமிமாவின் சகோதரர் பென்னின் மனைவி ஜெமிமா ஜோன்ஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜெமிமா (இம்ரான் கான் முதல் மனைவி) – கேமரூன் திருமணம் கோலாகலமாக நடந்தது. இந்த நாள் ஹேப்பியாக அமைந்தது” என பதிவிட்டுள்ளார்.

