இந்த சந்திப்பின் போது, தற்போது சிறைச்சாலை கட்டமைப்பு எதிர்கொண்டுள்ள சவால்கள் மற்றும் அவற்றுக்குத் தீர்வுகாண எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று, நேற்று (ஜூலை 17) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. சிறைச்சாலை அத்தியட்சகர்கள் மற்றும் ஜெயிலர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பின் போது, தற்போது சிறைச்சாலை கட்டமைப்பு எதிர்கொண்டுள்ள சவால்கள் மற்றும் அவற்றுக்குத் தீர்வுகாண எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
குறிப்பாக, அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதம் குறித்து நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
சிறைச்சாலை அதிகாரிகள் அன்றாடம் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவர்களின் நலன்புரி விடயங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.
தமது பிரச்சினைகளை ஜனாதிபதி ஒருவருடன் நேரடியாகக் கலந்துரையாடுவதற்குத் தமக்குக் கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவெனக் குறிப்பிட்ட அதிகாரிகள், இந்த வாய்ப்பை வழங்கியமைக்காக ஜனாதிபதிக்குத் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

