கோலாலம்பூர்:
சிறு தொழில்முனைவோர் போட்டித்திறனுடன் முன்னேறுவதற்காக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு பல்வேறு முன்னெடுப்புகளை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக அந்தத் துறையின் துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
மக்களவையில் நடைபெற்ற கேள்வி-பதில் அமர்வில் அவர் பேசுகையில், டிக்டோக் ஸ்டுடியோ, மைமால் தளம், தேசிய தொழில்முனைவோர் நிறுவனம் (இன்ஸ்கேன்), தெக்குன் நேஷனல் ஆகியவற்றின் வழிகாட்டுதல் திட்டங்கள் மூலம் சிறு தொழில்முனைவோரின் டிஜிட்டல் மயமாக்கலை வலுப்படுத்த அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
அதேபோல், “சிறு வணிகர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தினம்”, “கூட்டுறவு மடாணி விற்பனை” மற்றும் “தொழில்முனைவோர் விழா” போன்ற நிகழ்ச்சிகளையும் ஆதரித்து, “ஒரு மாவட்டத்திற்கு ஒரு தொழில்” திட்டத்தின் மூலம் இணை வணிக வாய்ப்புகளையும் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் ரஹ்மா மற்றும் சாரா விற்பனை திட்டங்களை முன்னெடுத்ததையடுத்து, சிறு வணிகர்களைப் பாதுகாக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கோல கிராய் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் லத்தீப் அப்துல் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்தான் ரமணன் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், சிறந்த வணிக வாய்ப்புகளை உருவாக்கவும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்த ஆண்டு சபா மற்றும் சரவாக்கில் 98 கிராம விருந்தினர் திட்டங்களை உருவாக்க ரூ.1.8 கோடி ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதியை அரசு ஒதுக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த முயற்சிகள் அனைத்தும் மலேசியா மடாணி கோட்பாட்டிற்கு ஏற்ப, உள்ளூர் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் சிறு வணிகர்களின் வளர்ச்சிக்கு அரசாங்கம் அளிக்கும் வலுவான ஆதரவை வெளிப்படுத்துவதாக ரமணன் வலியுறுத்தினார்.
The post சிறு தொழில்முனைவோரின் போட்டித்திறனை உயர்த்த பல்வேறு திட்டங்கள் – ரமணன் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

