
கனகராஜா சரவணன்
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனைப் பகுதியில், சிறுவன் ஒருவரைப் பலியிட்டுப் புதையல் தோண்ட முயன்றதாகக் கருதப்படும் இடத்தில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணி எவ்வித முடிவுகளுமின்றி நிறைவடைந்தது. நீதிமன்ற அனுமதியுடன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திங்கட்கிழமை (13) சுமார் 8 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தேடுதல் நடவடிக்கையில் எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.
மண்முனை பிரதான வீதியிலுள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் ஒரு குழுவினர் புதையல் தோண்டுவதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி இரவு,தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார், புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பின்வருவோரைக் கைது செய்தனர்:
- வீட்டின் உரிமையாளரான முதிய பெண்மணி.
- மொரட்டுவை பிரதேச செயலகத்தின் பிரதம கணக்காளர்.
- ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர்.
- மொரட்டுவை, கட்டுகஸ்தோட்டை, இங்கிரிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 நபர்கள்.
- பொலன்னறுவையைச் சேர்ந்த 16 வயது சிறுவன்.
கைது செய்யப்பட்ட 9 பேரும் மட்டக்களப்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அகழ்வுப் பணிக்கான காரணம்
விசாரணைகளின் போது, குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் இருக்கலாம் என பொலிஸாருக்குக் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் மேலதிக தேடுதல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனையின் பேரில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் வழிகாட்டலில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். யறூஸ் தலைமையில் இன்று தேடுதல் நடவடிக்கை ஆரம்பமானது. இதில் மாவட்ட தடயவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே. ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர், விசேட அதிரடிப்படையினர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேடுதல் நடவடிக்கை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளரான பெண்மணி சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டார். கனரக இயந்திரத்தின் (JCB) உதவியுடன் காலை 10:00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணி, மாலை 5:00 மணி வரை தொடர்ந்தது. சுமார் 10 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட போதிலும், சந்தேகத்திற்கிடமான எப்பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
இதனையடுத்து, மாலை 5:00 மணியளவில் தேடுதல் நடவடிக்கை கைவிடப்பட்டு, தோண்டப்பட்ட பகுதி மீண்டும் மூடப்பட்டது.

